xiv. மடங்களவு ஒன்றைத் திரும்பத் திரும்பச் செய்வது அதைப் பன்மடங்கு பெருக்குவதாயிருத்தலால், திரும்பற் கருத்துச் சொல் மடங்கலைக் குறித்தது. ஆங்கிலத்தில் turn (திரும்பு) என்னுஞ் சொல் முறையையும், fold (மடி) என்னுஞ் சொல் மடங்கையும், குறித்தல் காண்க. எ-டு: five turns, ten fold. (துடம்) - தடம் = வளைவு. தடம் - தரம் = முறை. ட - ர, போலி. ஒ.நோ: படவர் - பரவர். தடம் - தடவை = முறை. திரும்பு - திருப்பு = தடவை. முடங்கு - மடங்கு. இருமடங்கு = இருமுறையளவு. முடி - மடி = மடங்கு. இருமடியாகு பெயர், மும்மடிச் சோழன், நான்மடித் தொலைவரி (தந்தி) முதலிய தொடர்களை நோக்குக. முறு - முறை = வளைவு, தடவை. முள் - (மூள்) - (மாள்) - மாண் = மடங்கு. “பன்மாண்" (பரிபா. 13: 62) வள் - (வாள்) - வாட்டி = தடவை. சுற்று வட்டம் வளையம் முதலிய சொற்கள் முழுவளைவு குறித்தவை. xv. வருதல் ஓரிடத்திற்குச் சென்றவன் திரும்புதலே வருதலாம். இன்று சென்னைக்குச் சென்று நாளைக்குத் திரும்புவேன் என்னுங் கூற்றில், திரும்புவேன் என்பது திரும்பிவருவேன் என்று பொருள்படுதல் காண்க. செல்லுதல் வருதல் என்பன திசைநோக்கி வேறுபட்டனவே யன்றி, வினைவடிவில் வேறுபட்டனவல்ல. ஒருவன் ஓரிடத்தி னின்று மற்றோரிடத்திற்குச் செல்லும்போது, அவ் வினை புறப்பட்ட இடத்தை நோக்கிச் ‘செல்லுதல்’ என்றும், புகும் இடத்தை நோக்கி ‘வருதல்’ என்றும் கூறப்படும். ஆதலால், ஒருவன் ஓரிடத்திற்குப் புதிதாய் வரினும் மீண்டுவரினும், திசைபற்றி இரண்டும் ஒன்றாகவே கொள்ளப்படும். |