பக்கம் எண் :

89

எனப்பட்டது. மருதநிலத் தூர்கள் பேரூரும் நகருமாகி, திணைமயக்கமும் தொழில் பற்றிய குலப் பாகுபாடும் உண்டான பின், ஒவ்வொரு பேரூரிலும் ஒவ்வொரு குலத்தாருடைய தனிக் குடியிருப்பும் சேரி எனப்பட்டது. இங்ஙனம் இடைச்சேரி பறைச்சேரி பார்ப்பனச்சேரி என்னும் வழக்கு எழுந்தது.

“ஏமப் பேரூர்ச் சேரியும் சுரத்தும்’’                                  (அகத்.37)

என்றார் தொல்காப்பியர்.

சேரிகளில் வழங்கும் உலக வழக்கு அல்லது தெருப் பேச்சுநடை “சேரிமொழி‘ எனப்பட்டது.

“ சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து
  தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின்
  புலன்என மொழிப புலன் உணர்ந் தோரே’’                  (செய். 239)

என்று தொல்காப்பியர் கூறுதல் காண்க.

நாளடைவில் குலப் பாகுபாடு பிறப்பொடு தொடர்புபடுத்தி யமைக்கப்பட்ட பின், தாழ்த்தப்பட்டோர் பிற குலத்தாரோடு சேராது ஊருக்குப் புறம்பே வசிக்க நேர்ந்தது. அதிலிருந்து சேரி என்னும் சொல், தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பையே உணர்த்தி வருகின்றது.

3. பொது

சில சொற்களின் பொருள்கள், உயர்படையாமலும் இழிபடையாமலும் பொதுமுறையாகத் திரிந்துள்ளன.

பள்ளி என்பது, முதலாவது படுக்கையை யுணர்த்தும் சொல். “பள்ளிகொள்ளுதல்’, “பள்ளிகொண்டான்’, “பள்ளியெழுச்சி’ முதலிய வழக்குகளை நோக்குக. பள்ளி என்பது, கீழிடத்தை அல்லது தாழிடத்தை யுணர்த்தும்பள் என்னும் வேரினின்று பிறந்ததாகும். பள் + அம் = பள்ளம். பள் - படு. படுத்தல் - கீழே கிடத்தல்.

படுக்கையையுடைய கலமும் அறையும் வீடும் தானியாகு பெயர் என்னும் இடனாகுபெயராய்ப் பள்ளி எனப்படும். படுக்கும் அறையைப் பள்ளியறை யென்பர்.

இரப்போரும் துறவிகளும் வழிப்போக்கரும் திக்கிலிகளும் பள்ளி கொள்வதற்கென்று, அதாவது படுப்பதற்கென்று, ஏற்பட்ட மடமும் பள்ளி எனப்படும்.