விவாக முயற்சி 115

      களத்தூரும் அதனைச் சார்ந்த துர்க்கமும் நல்ல காட்சிகளையுடையன.
எனக்கு அவை அதுகாறும் அடையாத ஆனந்தத்தை உண்டாக்கின. ரஞ்சனகடி
துர்க்கத்திற்குச் சென்று அத்துர்க்கத்தின் அமைப்பையும் களத்தூரிலுள்ள
தோட்டத்தின் அழகையும் கண்டு மனமகிழ்வேன். அப்பக்கங்களிலுள்ள
முகம்மதியர்களில் தமிழறிவு நன்கு வாய்ந்தவர்களைச் சந்தித்து அவர்களோடு
சம்பாஷித்து அவர்கள் கூறும் செய்யுட்களைக் கேட்டு இன்புறுவேன். அவர்கள்
வேறு மதத்தினராக இருந்தாலும் தமிழின் நயத்தில் ஈடுபட்டுத் தமிழ்ச்
செய்யுட்களைப் பாடம் பண்ணுவதும், அவற்றின் சுவையை அனுபவித்துப்
பிறருக்கும் எடுத்துக் கூறி அவர்களையும் அனுபவிக்கச் செய்வதுமாகிய
காரியங்களைச் செய்து வந்தனர்.

      துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் சஞ்சரித்த இடங்களாதலின்
அப்பிரதேசங்களில் அவரைப்பற்றிய செய்திகள் மிகுதியாக வழங்கி வரலாயின.
அவருடைய நூல்களிலே மதிப்பு வைத்து யாவரும் படித்து வந்தனர். அவர்
வீர சைவராக இருப்பினும் முன்னே கூறிய முகம்மதியர்கள் அவருடைய
வாக்குக்குரிய மதிப்பை அளித்தலில் தவறவில்லை. அவர்கள் மஸ்தான் சாஹிபு
பாடல், சீறாப்புராணம் என்பவற்றில் அன்பு வைத்துப் படித்து வந்தார்கள்;
அவற்றைப் போலவே கம்பராமாயணம், திருவிளையாடல், பிரபு லிங்கலீலை
முதலியவற்றிலும் மதிப்புடையவர்களாகிக் கற்று வந்தனர். ஆதலின்
அவர்களிடத்தே எனக்கு ஈடுபாடுஉண்டாயிற்று.

இராமாயணப் பிரசங்கம்

      நாங்கள் களத்தூரில் எல்லாவிதமான அனுகூலங்களையும் பெற்றோம்.
அங்கே சென்று சில தினங்கள் ஆனவுடன் ராமையங்கார் முதலியோருடைய
விருப்பத்தின்படி ஒரு நல்ல நாளில் என் தந்தையார் இராமாயண கதாப்
பிரசங்கத்தைத் தொடங்கினர். நாள்தோறும் இரவு எட்டு மணி யளவுக்கு ஆரம்
பிக்கப் பெற்ற பிரசங்கம் பதினொரு மணி வரையில் நடைபெறும். பலர் வந்து
உத்ஸாகத்துடன் கேட்டுச் செல்வர்.

      இக்கதாப் பிரசங்கத்தில் தழும்பேறிய என் தந்தையார் தம் சங்கீதத்
திறமையை மிக விரிவாகக் காட்டினார்: அதற்கு என் சிறிய தந்தையாரும்
துணை செய்தனர். கீர்த்தனங்களை ராகத்தோடு பாடுவதிலே அதிக முயற்சியும்
பொருள் சொல்வதில் சிறிதளவு கருத்தும் முதலில் இருந்தன. வரவரப்
பொருள்கூறும் முறையும் விரிவடைந்தது. தமக்குள்ள தமிழறிவையும்
ஸம்ஸ்கிருத ஞானத்தையும் எந்த அளவிற்குப் பயன்படுத்திக் கொள்ளலாமோ
அந்த