பிள்ளையவர்கள் முன் முதல் நாள் 161

      தாம் எனக்குச் சங்கீதத்தை முறையாகக் கற்பித்து வந்ததை என்
தந்தையார் தெரிவித்தார். அப்பால் தாம் கனம் கிருஷ்ணையரிடம்
குருகுலவாசம் செய்து சங்கீதம் கற்றதையும் சொன்னார்.

      “இந்த ஊரிலுள்ள கோபாலகிருஷ்ண பாரதியாரைத் தெரியுமோ?” என்று
பிள்ளையவர்கள் கேட்டனர்.

      “நன்றாகத் தெரியும். அவரும் கனம் கிருஷ்ணையரிடம் சில காலம்
அப்பியாசம் செய்ததுண்டு.”

பரீட்சை

      இவ்வாறு எங்கள் வரலாற்றை அறிந்துகொண்ட பின்பு அக் கவிஞர்
பெருமான் என்னைப் பார்த்து, “நைடதத்தில் ஏதாவது ஒரு பாடலைச்
சொல்லும்” என்றார். அந்த மகா வித்துவானுக்கு முன், காட்டுப்
பிராந்தியங்களிலே தமிழறிவைச் சேகரித்துக் கொண்ட நான் எவ்வளவு
சிறியவன்! எனக்குப் பாடல் சொல்லத் தைரியம் உண்டாகவில்லை. மனம்
நடுங்கியது. உடல் பதறியது; வேர்வை உண்டாயிற்று. நாக்கு உள்ளே இழுத்தது.
இரண்டு மூன்று நிமிஷங்கள் இவ்வாறு நான் தடுமாறினேன். அப்பால் ஒருவாறு
நைடதத்திலுள்ள, “தழைவிரி கடுக்கை மாலை” என்னும் காப்புச் செய்யுளைக்
கல்யாணி ராகத்தில் மெல்லச் சொன்னேன்; முதலடியை,

      “தழைவிரி கடுக்கை மாலைத் தனிமுதற் சடையிற் சூடும்”

      என்று நான் சொன்னேன். பிள்ளையவர்கள் இடைமறித்து, “தனி முதல்
சடையிற்சூடும்” என்று சொல்லித் திருத்தினார். பல காலமாகப் பிழைபட்ட
பாடத்தை உருவேற்றி இருந்த எனக்கு அந்தப் பாடமே முன் வந்தது. என்
நடுக்கம் அதிகமாயிற்று. ஆனாலும் பாடல் முழுவதையும் சொல்லி முடித்தேன்.
நான் அதைச் சொல்லும்போதே அவர் முகத்தையும் கவனித்தேன். “நான்
சொல்வதில் அவருக்கு வெறுப்பு உண்டாகுமோ” என்று பயந்தேன். நல்ல
வேளையாக அவர் முகத்தில் அத்தகைய குறிப்பு ஒன்றும் தோற்றவில்லை.
எனக்கும் சிறிது ஊக்கம் உண்டாயிற்று.

      “இன்னும் ஒரு பாடல் சொல்லும்” என்றார் அவர். நான் நைடதத்தின்
சிறப்புப் பாயிரமாகிய, “நிலவு பொழி தனிக்கவிகை” என்னும் பாடலைச்
சாவேரி ராகத்தில் சொன்னேன். அந்த இரண்டு செய்யுட்களையும் மீட்டும்
சொல்லிப் பொருள் கூறும்படி கூறினார். நான் பாடல்களைச் சொல்லிப்
பொருள் கூறத் தொடங்குகையில் நாக்குத் தழுதழுத்தது.