ஆறுமுகத்தா பிள்ளையின் அச்சம் அப்போது பக்கத்திலிருந்து எல்லாவற்றையும் கவனித்து வந்த ஆறுமுகத்தா பிள்ளை திடீரென்று எழுந்தார்; பண்டார சந்நிதிகளை நமஸ்காரஞ் செய்து எழுந்து நின்று வாய்புதைத்துக்கொண்டே, “ஐயா அவர்களைப் பட்டீச்சுரத்திற்கு அழைத்துக்கொண்டு சென்று சிலகாலம் வைத்திருந்து அனுப்பும்படி சந்நிதானத்தில் உத்தரவாக வேண்டும். அவர்களால் எனக்கு ஆகவேண்டிய காரியங்கள் சில இருக்கின்றன. அதனால்தான் அடியேன் மாயூரம் சென்று ஐயா அவர்களை அழைத்து வந்தேன்” என்றார். சுப்பிரமணிய தேசிகர் பிள்ளையவர்களிடம் பேசியவற்றைக் கேட்ட அவருக்கு, “நம் காரியம் கெட்டுப் போய் விட்டால் என்ன பண்ணுவது! பிள்ளையவர்கள் இங்கேயே தங்கிவிடப் போகிறார்களே!” என்ற பயம் பிடித்துக் கொண்டது. சுப்பிரமணிய தேசிகர் அவர் கருத்தை உணர்ந்து கொண்டார். குறுநகையுடன், “அப்படியே செய்யலாம்; அதற்கென்ன தடை? பிள்ளையவர்கள் எல்லோருக்கும் சொந்தமல்லவோ?” என்று சொன்னார். அப்போதுதான் ஆறுமுகத்தா பிள்ளைக்கு ஆறுதல் உண்டாயிற்று. விடையளித்தல் “சரி. பட்டீச்சுரம் போய்ச் சில காலம் இருந்து விட்டு இங்கே வந்து விடலாம்” என்று சுப்பிரமணிய தேசிகர் பிள்ளையவர்களுக்கு விடை கொடுக்கவே என் ஆசிரியர் எழுந்து பணிந்து விபூதிப் பிரசாதம் பெற்று மடத்திற்கு வெளியே வந்தார். தம்பிரான்களும் வேறு சிலரும் அவருடன் வந்தார்கள். சிலர் ஆறுமுகத்தா பிள்ளையை நோக்கி, “இதுதான் சாக்கு என்று ஐயா அவர்களை நீண்ட காலம் பட்டீச்சுரத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டாம்” என்றனர். அப்பால் பேசிக்கொண்டே சிறிது தூரம் யாவரும் வந்தனர். சிலர் என்னிடம் வந்து, “உம்முடைய ஊர் எது? என்ன என்ன புஸ்தகம் பாடம் கேட்டிருக்கின்றீர்?” என்று கேட்டனர். நான் தக்கவாறு பதில் உரைத்தேன். சிலர் நான் படித்த நூல்களில் சில சந்தேகங்கள் கேட்டனர். அன்று காலை யிலிருந்து சுப்பிரமணிய தேசிகரும் பிள்ளையவர்களும் என்னிடம் காட்டிய அன்பு எல்லோருடைய உள்ளத்திலும் என்பால் ஒரு மதிப்பை உண்டாக்கி விட்டது. இல்லாவிடின் சிறு பையனாகிய என்னிடத்தில் தம்பிரான்கள் வந்து சந்தேகம் கேட்பார்களா! “நாம் படித்தது எவ்வளவு கொஞ்சம்? அதற்கு ஏற்படும் பெருமை |