ரெட்டியாரிடம் அதிருப்தி ஏற்பட்டதென்று பிறகு தெரிந்து கொண்டேன். நீலி இரட்டைமணிமாலை ஆனாலும் ரெட்டியாருக்கு எங்கள்பால் இருந்த அன்பு குறையவில்லை. அவர் அக்காலத்திற் கடுமையான நோய் ஒன்றால் மிகவும் கஷ்டப்பட்டார். அவருடைய மூத்த குமாரர் என்னை நோக்கி, “நீர் சிறந்த சாம்பவருடைய குமாரர். எங்கள் குல தெய்வத்தின் விஷயமாகப் புதிய தோத்திரச் செய்யுட்கள் பாடினால் தகப்பனாருக்கு அனுகூலமாகலாம்” என்று கூறினார். அவர் விரும்பியபடியே அவர்கள் குலதெய்வமும் அருளுறையென்றும் ஊரில் எழுந்தருளியிருக்கும் துர்க்கையுமாகிய நீலி என்னும் தெய்வத்தின் விஷயமாக ஓர் இரட்டைமணி மாலை பாடினேன். அதில் ஒரு செய்யுள் வருமாறு: “கடல்வாய் வருமமு தாசனர் போற்றக் கவின்றிகழும் மடல்வாய் சலசமடந்தையர் வாழ்ந்த மணித்தவிசின் அடல்வா யருளுறை மேவிய நீலி யடி பணிந்தோர் கெடல்வாய் பிணியினைப் போழ்ந்தே சதாவிதங் கிட்டு வரே.” [அமுதாசனர் - அமிர்தத்தை உணவாகவுடைய தேவர்கள். சலசமடந்தையர் - தாமரையில் வாழும் தேவியாகிய கலைமகளும் திருமகளும். மணித்தவிசு - மாணிக்க ஆசனம். இதம் - நன்மை. நான் இயற்றிய இரட்டைமணிமாலையை விருத்தாசல ரெட்டியார் தினந்தோறும் பாராயணம் செய்து வந்தார். நான் அவருடைய பிள்ளைகளுள் இளையவர்களாகிய பெரியப்பு, சின்னப்பு என்னும் இருவருக்கும் அவர் கேட்டுக்கொண்டபடி நைடதம் முதலிய பாடங்களைக் கற்பித்து வந்தேன். வேறு சில பிள்ளைகளும் என்னிடம் பாடம் கேட்டார்கள். காரைக்குப் பிரயாணம் விருத்தாசல ரெட்டியாருடைய மூத்த குமாரராகிய நல்லப்ப ரெட்டியார் முன்பே எங்களிடம் விசுவாசம் வைத்துப் பழகியவர். அவரும் அக்காலத்தில் மிக்க ஆதரவு செய்து வந்தார். எங்களுக்கு வேண்டிய பொருள்களைப் பெற்றுச் சுகமாக இருந்தோம். ஆகாரம் முதலிய விஷயங்களில் குறைவு இராவிடினும் கடனைத் தீர்ப்பதற்கு வேண்டிய பொருளுதவி கிடைக்கவில்லை. அக்குறையை நான் நல்லப்ப ரெட்டியாரிடம் தெரிவித்துக் கொண்டேன். அவர் அருகில் உள்ள ஊராகிய காரையென்பதில் வாழ்ந்து வந்த செல்வரும் |