திருவிளையாடற் பிரசங்கம் 367

      புராணப் பிரசங்கத்தைக் கேட்டு, “பதத்துக்குப் பதம் அர்த்தம் சொல்லி
உபந்நியாசம் செய்கிறாரே!” என்று பாராட்டினார்கள் என் இளமை முயற்சியில்
உத்ஸாகம் உண்டாக்க இந்நிகழ்ச்சிகளெல்லாம் காரணமாயின.

பொழுதுபோக்கு

      பகல் வேளைகளில் தமிழ் நூல்களைப் படித்துக் கொண்டும்
அன்பர்களோடு பேசிக்கொண்டும் பொழுது போக்கினேன். கிருஷ்ணசாமி
ரெட்டியாருக்குத் திருவானைக்காப் புராணத்தைப் படித்து உரை சொல்லி
வந்தேன். அவர் தெலுங்கில் வல்லவராதலின், அம்மொழியிலுள்ள வஸூ
சரித்திரம், மனு சரித்திரம் முதலியவற்றிலிருந்து சில பத்தியங்களைச் சொல்லிப்
பொருள் கூறுவார். அவற்றில் சிலவற்றை அவர் விருப்பத்தின்படியே தமிழ்ச்
செய்யுளாக மொழி பெயர்த்து அவருக்குக் காட்டுவேன். அவர் மிக்க
சந்தோஷமடைவார்.

      அவ்வூரில் இருந்த பரிகாரி ஒருவன் வேதாந்த சாஸ்திரத்தில் நல்ல
பழக்கம் உடையவனாக இருந்தான். அவன் அடிக்கடி வந்து நெடுநேரம் இருந்து
பேசிவிட்டுச் செல்வான். வேறு ஊர்களிலிருந்து வரும் கனவான்களும் பகலில்
வந்து அன்போடு பேசித் தங்கள் தங்கள் ஊருக்கு வந்துபோக வேண்டுமென்று
விரும்புவார்கள்.

வெங்கனூர்

      வெங்கனூர் என்னும் ஊரிலிருந்து தம்புரெட்டியாரென்பவர் ஒரு நாள்
வந்திருந்தார். கவிதா ஸார்வ பௌமராகிய துறைமங்கலம் சிவப்பிரகாச
சுவாமிகளை ஆதரித்த அண்ணாமலை ரெட்டியாரது பரம்பரையிற் பிறந்தவர்
அவர். சிவப்பிராகாச சுவாமிகள் திருவெங்கையுலா முதலிய பிரபந்தங்களில்
அவ்வுபகாரியினது சிறப்பை எடுத்துச் சொல்லியிருக்கிறார். என்
இளமையிலேயே சிவப்பிரகாச சுவாமிகளிடத்தில் மதிப்பு இருந்தாலும்
பிள்ளையவர்களிடம் பழகிய பிறகு அது வரம்பு கடந்ததாயிற்று. வெங்கைக்
கோவை முதலிய நூல்களைப் பாடம் கேட்டபோது என் ஆசிரியர் அவருடைய
புலமைத் திறத்தை வியந்து பாராட்டுவதைக் கேட்டுக் கேட்டு அத்துறவியர்
பெருமானைத் தெய்வம் போலப் பாவிக்க ஆரம்பித்தேன்.

      தம்பு ரெட்டியார் வெங்கனூர்க் கோயிலில் அமைந்துள்ள சிற்ப
விசேஷங்களை எடுத்துரைத்தார் அண்ணாமலை ரெட்டியார் பல