4என் சரித்திரம்

      இப்போதோ அந்தச் சாந்தியை எங்கேயோ போக்கிவிட்டு வெகு
வேகமாக ஓடிக்கொண்டே இருக்கிறோம். நம்முடைய வேகம் அதிகரிக்க
அதிகரிக்க அந்தச் சாந்திக்கும் நமக்கும் இடையிலுள்ள தூரம் அதிகமாகின்றதே
யொழியக் குறையவில்லை.

      எங்கள் ஊரைச் சுற்றிப் பல வாய்க்கால்கள் உண்டு. குடமுருட்டி
ஆற்றிலிருந்து பிரிந்து வரும் பெரிய வாய்க்கால் ஒன்று முக்கியமானது.
பெரியவர்கள், விடியற் காலையில் எழுந்து குடமுருட்டி யாற்றுக்குப்போய் நீராடி
வருவார்கள். அங்கே போக முடியாதவர்கள் வாய்க்காலிலாவது குளத்திலாவது
ஸ்நானம் செய்வார்கள். அந்நதி ஊருக்கு வடக்கே ஒன்றரை மைல் தூரத்தில்
இருக்கிறது. அதற்கு ஒற்றையடிப் பாதையிற் போகவேண்டும்; வயல்களின்
வரப்புக்களில் ஏறி இறங்கவேண்டும். சூரியோதய காலத்தில், நீர்க் காவியேறிய
வஸ்திரத்தை உடுத்து நெற்றி நிறைய விபூதி தரித்துக்கொண்டு வீடுதோறும்
ஜபம் செய்துகொண்டிருக்கும் அந்தணர்களைப் பார்த்தால் நம்மை அறியாமலே
அவர்களிடம் ஒரு விதமான பக்தி தோற்றும். காயத்திரி ஜபமும் வேறு
ஜபங்களும் முடிந்த பிறகு அவர்கள் சூரிய நமஸ்காரம் செய்வார்கள்.

      அது வரையில் தவக்கோலத்தில் இருக்கும் அவர்கள் பிறகு வயற்
காட்டை நோக்கிக் கிளம்பி விடுவார்கள். சிலர் மண் வெட்டியையும். சிலர்
அதனோடு அரிவாளையும் எடுத்துக்கொண்டு புறப்படுவார்கள். தேக பலத்திற்
சிறிதும் குறைவில்லாத அவ்வந்தணர்கள் நடுப் பகல் வரையில் வயற் காடுகளில்
வேலை வாங்கித் தாமே வேலை செய்தும் பொழுது போக்குவார்கள். பிறகு
வீட்டிற்கு வந்து பூஜைசெய்து உணவை உட்கொண்ட பின் இராமாயண பாரத
புராண கதைகளைப் படிப்பார்கள். தமிழ் ஸம்ஸ்கிருதம் என்ற இரண்டு
பாஷைகளிலும் உள்ள நூல்களைப் படித்தும் படிக்கச் செய்தும் இன்புறுவார்கள்.

      பிற்பகலில் மீண்டும் வயற் காட்டுக்குச் சென்று கவனிக்க
வேண்டியவற்றைக் கவனித்து விட்டு ஆறு மணியளவுக்கு வீட்டுக்கு
வருவார்கள். அப்பால் லக்ஷ்மீ தீர்த்தத்தில் ஸந்தியாவந்தனம் செய்துகொண்டு
ஆலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்வார்கள். பிறகு வீட்டுக்கு வந்து
ஆகாரம் செய்து தரிசனம் செய்வார்கள். பிறகு வீட்டுக்கு வந்து ஆகாரம்
செய்து விட்டு ஒன்பது மணி வரையில் புராண சிரவணம் செய்வார்கள்.
வாரத்தில் சில நாட்கள் பஜனை செய்வதும் உண்டு.

      காய்கறித் தோட்டங்கள் போட்டு அவற்றை நன்றாகப் பாதுகாத்து
விருத்தி செய்வதிலும், பசுக்களையும் எருமைகளையும் வளர்த்துப்
பாதுகாப்பதிலும் அவர்களுக்கு ஊக்கம் அதிகம்.