644என் சரித்திரம்

      எங்கே? இந்த வம்சம் இப்படியா ஆகவேண்டும்!” என்று நான்
வருந்தினேன்.

நெல்லையப்பக் கவிராயர் உதவி

      பின் இரண்டு நாட்கள் திருநெல்வேலியில் இருந்து சில வீடுகளைப்
பார்த்து விட்டு நெல்லையப்பக் கவிராயர் அவர் தம்பி முதலியவர்களிடம்
விடை பெற்றுக் கும்பகோணத்துக்குப் புறப்பட்டேன். அப்போது எனக்குப் பல
வகையில் உதவி செய்த நெல்லையப்பக் கவிராயருடைய அன்பு என்
உள்ளத்தில் நிரம்பியிருந்தது. அவருக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்!
புறப்படுகையில்,

      “சங்கத் தமிழைத் தளர்வின்றி யான்பெறவே
      அங்கங் குடன்வந் தளித்திட்டோன்-பொங்குபுகழ்
      இன்போடு மீசனடி யெண்ணுநெல்லை யப்பனைப்போல்
      அன்போ டுதவி செய்வா ரார்”

      என்ற வெண்பாவை அவரிடம் சொன்னேன்.

மீட்டும் அதிருப்தி

      கும்பகோணம் வந்த பின் என் பிரயாண விவரத்தை அம்பலவாண
தேசிகருக்குத் தெரிவித்தேன். பிறகு வண்ணார் பேட்டைப் பிரதியோடு வேறு
பிரதிகளையும் வைத்துக்கொண்டு ஆராயத் தொடங்கினேன். அப்பிரதியிலும்
உரையில் சில பகுதிகள் குறைந்திருந்தன. திருநெல்வேலிக்குப்
போயிருந்தபோது, ஆழ்வார் திருநகரியில் பல வித்துவான்கள் வீடுகள்
உண்டென்று சொன்னார்களே. அங்கே போய்ப் பார்க்கலாமென்ற சபலம்
அப்போது உண்டாயிற்று. ஆவணியவிட்டத்தைச் சார்ந்து சில நாட்கள்
காலேஜில் விடுமுறை இருந்தது. அச்சமயம் போகலாமென்று நிச்சயித்து என்
வரவை அந்தப் பிரதேசத்திலிருந்த சில நண்பர்களுக்கும், ஜவந்திபுரத்தில்
திருவாவடுதுறை மடம் பெரிய காறுபாறாக இருந்த பன்னிருகைத்
தம்பிரானுக்கும், அந்தப் பக்கத்தில் பள்ளிக்கூட இன்ஸ்பெக்டராக இருந்த
சிவராம ஐயருக்கும் கடிதங்கள் எழுதினேன்.

கனகசபை முதலியார்

      திருநெல்வேலியில் அக்காலத்தில் சப் ஜட்ஜாக இருந்த கனகசபை
முதலியாரென்பவர் நான் சீவகசிந்தாமணியை வெளிப்படுத்திய காலத்தில்
எனக்குப் பழக்கமானார்; உதவியும் செய்தார்;