தமிழ்க் கோயில் 689

      சாலையிலே வைக்க ஆதலால் நீரதைப் பார்க்க வேண்டுமேல் அந்தக்
கடுதாசிப் பிரதி அனுப்புவோம். நீரதைக் கண்டுமில்லாத கவிகளும்
வார்த்தைகளும் போட்டுத் திருப்பியனுப்பலாம்” என்று எழுதினார்.

      தமிழ் நாட்டில் தங்கள் பரம்பரைச் செல்வமாகக் கருதற்குரிய ஏடுகளை
நீருக்கும் நெருப்புக்கும் இரையாக்கி விட்டவர்களைப் பார்த்து வருந்திய
எனக்குப் பல்லாயிர மைல்களுக்கப்பால் ஓரிடத்தில் தமிழன்னையின்
ஆபரணங்கள் மிகவும் சிரத்தையோடு பாதுகாக்கப் பெறும் செய்தி மேலும்
மேலும் வியப்பை உண்டாக்கி வந்தது. ஆயிரம் தமிழ்ச்சுவடிகள் பாரிஸ்
நகரத்துப் புஸ்தகசாலையில் உள்ளனவென்பதைக் கண்டு, ‘இங்கே உள்ளவர்கள்
எல்லாச் சுவடிகளையும் போக்கி விட்டாலும் அந்த ஆயிரம் சுவடிகளேனும்
பாதுகாப்பில் இருக்கும்’ என்று எண்ணினேன். மணிமேகலையையும் நான்
இடை யிடையே ஆராய்ந்து வந்தேனாதலால் அதன் பிரதி
பாரிஸிலிருப்பதறிந்து அந்நண்பருக்குச் சில பகுதிகளைப் பிரதி செய்து
அனுப்பும்படி எழுதினேன். அவர் அவ்வாறே அனுப்பினார். அது மிக்க
பிழையுடையதாக இருந்தமையால் மேற்கொண்டு அவருக்குச் சிரமம் கொடாமல்
நிறுத்திக் கொண்டேன்.

திருப்பெருந்துறை

      1891-ஆம் வருஷம் மே மாதம் என் குமாரன் சிரஞ்சீவி கலியாண
சுந்தரத்துக்கு உபநயனம் நடைபெற்றது. அதே காலத்தில் திருப்
பெருந்துறையில் மடபதியாக இருந்த கண்ணப்பத் தம்பிரானுடைய முயற்சியால்
அவ்வாலய கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. திருவாவடுதுறை
ஆதீனத்தலைவர் அதற்காக எனக்கு அழைப்பு அனுப்பியும் உபநயன
ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டியிருந்தமையால் அப்போது அங்கே போக
முடியவில்லை. ஆயினும் உபநயனம் நிறைவேறிய பிறகு திருப்பெருந்துறை
சென்று தரிசனம் செய்தேன். அங்கேயுள்ள ஆலயத்தைச் சார்ந்த
புத்தகசாலையில் சில ஏட்டுச்சுவடிகள் இருந்தன. அவற்றைப் பார்த்தபோது
எனக்கு வேண்டியது ஒன்றும் கிடைக்கவில்லை.

குன்றக்குடி

      திருப்பெருந்துறையிலிருந்து குன்றக்குடி சென்று ஆதீன கர்த்தரையும்
அங்கே சின்னப் பட்டத்தில் இருந்த என் நண்பர் ஆறுமுக தேசிகரையும்
கண்டு பேசினேன். மடத்தின் தலைமைக் குமாஸ்தாவாக இருந்த
அப்பாப்பிள்ளையைக் கண்டு, தமிழ் ஏட்டுச் சுவடிகள் இருக்குமிடத்தைத்
தெரிவிக்க வேண்டுமென்று முன்பு