124ஊரும் பேரும்

சிவபாத சேகரன்

 

   திருச்சி நாட்டைச் சேர்ந்த குழித்தலைக்குத் தெந்கே ஐந்து மைல்
அளவில் சிவாயம் என்னும் பெயருடைய ஊர் ஒன்று உள்ளது. சிவாயம்
என்பது சிவபாத சேகரபுரம் என்ற பெயரின் சிதைவாகும். அங்குள்ள
கோயில் திருவாலீச்சுரம் என்ற பெயருடையதென்பது சாசனத்தால்
விளங்கும்.89
 

உய்யக் கொண்டான்

     உய்யக்கொண்டான் என்பது இராஜராஜரின் சிறப்புப் பெயர்களில்
ஒன்று. இப் பெயர் தமிழ் நாட்டு மலைகளோடும், கால்களோடும் மருவி
நிற்கக் காணலாம். சோழ நாட்டில் பாடல் பெற்ற பதிகளுள் ஒன்றாகிய
கற்குடி என்பது உய்யக் கொண்டான் திருமலை என்று பெயர் பெற்றது.
இன்னும் திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில் காவிரியாற்றினின்றும்
கிளைத்துச் செல்லும் உய்யக்கொண்டான் வாய்க்கால் இம்மன்னன்
பெயரையே தாங்கி நிலவுகின்றது.

     சோழபுரம் என்னும் பெயருடைய ஊர்களில் ஒன்று வடஆர்க்காட்டு
வேலூருக்குத் தெற்கே எட்டு மைல் தூரத்தில் உள்ளது. அதன் பழம் பெயர்
காட்டுத்தும்பூர் என்பதாகும்.90 இராஜராஜ சோழன் அவ்வூரில் இராஜ
ராஜேச்சரம் என்னும் சிவாலயம் கட்டியதோடு, ஊரின் பெயரையும்
உய்யக்கொண்டான் சோழபுரம் என மாற்றிவிட்டதாகத் தெரிகின்றது.91
இப்பொழுது ஆலயம் பழுதுற்றிருக்கின்றது. ஊர்ப் பெயரும் சோழபுரம் எனக்
குறுகிவிட்டது.