136ஊரும் பேரும்

பெருமாள் நாமத்தையே பெரிதும் பேசக் கருதிய பொது மக்கள் நரச நாயகபுரத்தை நரசிங்கபுரமாக்கி விட்டனர்.119

                    
 குறுநில மன்னர்
 

பாரி

     தமிழ் நாட்டில் ஈகையாலே புகழ்பெற்ற வள்ளல்கள் பலர் இருந்தனர்.
பாண்டி நாட்டிற் குறுநில மன்னனாக விளங்கிய பாரி வள்ளலின் பெருமை
தமிழகம் முழுவதும் பரந்திருந்தது. கொடைத் திறத்திற்கு இவனையே ஒரு
வரம்பாக எடுத்துக் காட்டினர் கவிஞர். “கொடுக்கிலாதானைப் பாரியே என்று
கூறினும் கொடுப்பாரிலை” என்று பாடினார் சுந்தரமூர்த்தி. இங்ஙனம்
ஆன்றோர் புகழும் பேறு பெற்ற பாரி வள்ளல் சைவ சீலனாக
விளங்கினான். அவ்வள்ளலுக்குரிய பறம்பு நாட்டிற் காணப்படும் பாரீச்சுரம்
என்னும் சிவாலயம் அவன் எடுத்த திருக்கோயிலாகக் கருதப்படுகின்றது.120
பாரீச்சுரம் என்பது பாரியால் வழிபடப்பெற்ற சிவபிரான் கோயில்
கொண்டதலம் என்ற பொருளைத் தரும். அப் பாரீச்சுரம் தேவாரப் பாடல்
பெற்ற கொடுங் குன்றத்திற்கு அருகேயுள்ளது. எனவே, இக் காலத்திற்
பிரான்மலை யெனப்படும் கொடுங்குன்றத்தைத் தன்னகத்தேயுடைய
பறம்பு நாடே பாரியின் நாடென்பதும், அங்குள்ள பாரீச்சுரம் அவன் எடுத்த
திருக்கோயில் என்பதும் இனிது விளங்கும்.
 

ஆய்

    பொதியமலைக்கு அண்மையிலிருந்த நாட்டை ஆய் என்ற குலத்தார்
நெடுங்காலம் ஆண்டு வந்தனர். அக் குலத்தில் வந்த ஆய் அண்டிரன்
என்னும் வள்ளல்,