குலமும் கோவும் 141

முதலியவற்றோடு இணைந்துள்ளன. சென்னையின் அருகே அமைந்துள்ள
சைதாப்பேட்டையும், வட ஆர்க்காட்டிலுள்ள ஜாவ்வர் பேட்டை, மூர்தானா
பட்டடை முதலிய ஊர்களும் மகமதிய சம்பந்தமுடையன என்பது
வெளிப்படை.
 

அபாத்


     இன்னும் மகமதியரோடு தொடர்புடைய ஊர்கள், அபாத் என்பது
முடிவுடைய பெயர் கொண்டு வழங்கக் காணலாம். பாரசீக மொழியில் அபாத்
என்பது நகரத்தைக் குறிக்கும். ஆர்க்காட்டு வட்டத்தில் மன்சரபாத்.
அனவரபாத், முரார்பாத் முதலிய ஊர்கள் காணப்படுகின்றன.

    தமிழ் நாட்டில் மகமதிய வகுப்பாரைக் குறிக்கும் ராவுத்தர், மரக்காயர்
முதலிய பொருள்களும் ஊர்ப் பெயர்களில் புகுந்துள்ளன. தென்
ஆர்காட்டிலுள்ள ராவுத்த நல்லூரும், இராமநாத புரத்திலுள்ள மரக்காயர்

பட்டினமும் இவ்வுண்மைக்குச் சான்றாகும்.
 

உசேன்


    வட ஆர்க்காட்டு வேலூருக்கு அருகே ஊசூர் என்னும் ஊர் உள்ளது.
அஃது உசேன் என்ற மகமதியர் பெயரால் அமைந்த ஊராகும். உசேனூர்
என்பது ஊசூர் என மருவிற்று. உசேன்பாத் என்னும் பெயரும் அதற்குண்டு.
இன்னும் வட ஆர்க்காட்டுப் போளூர் வட்டத்தில் அலியாபாத் என்னும்
ஊரும், மன்சராபாத் என்னும் துருக்கமும் உள்ளன. அவை முறையே அலி,
மன்சூர் என்ற இரு மகமதியர் பெயரைக் கொண்டுள்ளன.