குலமும் கோவும் 153

               ஆட்பெயரும் ஊர்ப்பெயரும்
கீரன்


    பழந் தமிழ் நூல்களில் பேசப்படுகின்ற கீரன், ஆதன் முதலிய
பெயர்கள் தமிழ் நாட்டு ஊர்ப் பெயர்களிற் கலந்துள்ளன. கீரன் என்னும்
பழம் பெயருக்கு பெரும் புகழ் அளித்த புலவர் நக்கீரர் என்பது நாடறிந்தது.
கீரனூர் என்னும் பெயருடைய ஊர்கள் தமிழ் நாட்டின் பல பாகங்களில்
உண்டு.
 

ஆதன்

    ஆதன் என்னும் சொல் சேரகுல மன்னர் பெயரோடு சேர்த்துப்
பேசப்படுகின்றது. இளங்கோவடிகளின் தந்தை சேரலாதன் என்று
குறிக்கப்படுகின்றான். ஆதன் பெயரைத் தாங்கிய ஆதனூர்களும் தமிழ்
நாட்டிற் காணப்படும்.
 

கோடன்

    கோடன் என்னும் பெயரும் ஊர்ப் பெயராக வழங்குவதுண்டு.
சென்னைக்கு அணித்தாக உள்ள கோடம்பாக்கம் கோடன்பாக்கமே. நெல்லை
நாட்டில் முன்னாளில் கோடனூர் என்று வழங்கிய ஊர் இந் நாளில் கோடக
நல்லூர் எனப்படுகின்றது.
 

டோனா

    இன்னும் பிற நாட்டுப் பெருமக்கள் பெயரும் தமிழ் நாட்டில் சில
ஊர்களுக்கு அமைந்துள்ளன. நெல்லை நாட்டில் டோனாவூர் என்னும்
சிற்றூர் இந்நாளிற் சிறந்து விளங்குகின்றது. அவ்வூரின் பழம் பெயர்
புலியூர்க் குறிஞ்சி  என்பதாகும். கிருத்தவ சமயம் நெல்லை நாட்டிற் பரவத்
தலைப்பட்ட போது கிருஸ்தவரானவர்கள் குடியிருந்து