பரங் குன்றத்து மேவிய பரமனைத் தமிழ்நாட்டு மூவேந்தருடன் சென்று
வழிபட்டுத் திருப்புகழ்
பாடினார் சுந்தரர்.
“முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே
மொழிந்த பாடல்” என்று அவர் தாமே
கூறுதலால் இவ்வுண்மை அறியப்படும். பரம்பொருளாகிய ஈசன் கோயில்
கொண்டமையால் அது பரங்குன்றென்னும்
பெயர் பெற்றதென்றும்
தோன்றுகின்றது.
பருப்பதம்
இந் நாளில் ஆந்திர தேசத்துக் கர்னூல் நாட்டில் சிறந்து விளங்கும்
ஸ்ரீசைலம் என்னும் பதியே
பருப்பதம் ஆகும். கல்லார்ந்த வழி நடந்து,
அரிதிற் காண்டற்குரியது அப் பதி. “செல்லல்
உற அரிய சிவன் சீபர்ப்பத மலை” என்று
சுந்தரர் பாடியதன் கருத்து இதுவே போலும்!
கிருஷ்ண
நதிக்கரையிலுள்ள குன்றுகளிடையே நிவந்தோங்கி நிற்கும்
பருப்பதத்தின் நடுநாயகமாக மல்லிகார்ச்சுனம்
என்னும் திருக்கோயில்
விளங்குவதாகும். அதைச் சார்ந்த அளகேச்சுரம் முதலான பல
ஆலயங்களும்
மண்டபங்களும் ஆற்றின் இருமருங்கும் உள்ளன.
செங்குன்றம்
கொங்கு நாட்டுத் திரு மலைகளுள் ஒன்று திருச்செங்குன்றம். அம்
மலையைச் சார்ந்த தலத்தைக்
கொடிமாடச்
செங்குன்றூர் என்று தேவாரம்
போற்றுகின்றது.
செந்நிறமுடையதாயிருத்தலால் செங்குன்றம்
என்னும் பெயர்
அதற்கு வந்தது போலும்! இந் நாளில் சேலம் நாட்டில்
|