இனி, பாண்டி நாட்டில் மாணிக்க வாசகர்க்கு ஈசன் அருள் புரிந்த
இடமும் திருப்பெருந்துறையாகும்.
சிவபெருமானைத் ‘திருவார் பெருந்துறைச்
செல்வன்’ என்று கீர்த்தித் திரு அகவல் கூறும். திருப்
பெருந்துறையில்
இருந்தருளும் இறைவனை,
“தில்லைவாழ் கூத்தா சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே”
என்றழைக்கின்றார் மாணிக்கவாசகர். இப் பதி ஆவுடையார் கோயில்
என்னும் பெயரோடு தஞ்சை
நாட்டு அறந்தாங்கி வட்டத்தில் உள்ளது.7
குரங்காடு துறை
காவிரியாற்றின் கரையில் குரங்காடு துறையென்னும் பெயருடைய
தலங்கள் இரண்டு உண்டு. அவற்றுள்
வடகரையிலே அமைந்த குரங்காடு
துறையில் வாலியென்னும் வானர மன்னன் இறைவனை வணங்கினான்
என்பர்.8 “கோலமா மலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி
வாலியார் வழிபட” நின்ற
கோயில் வட குரங்காடு துறை என்பது திருஞான
சம்பந்தர் தேவாரத்தால் விளங்கும். இனி,
காவிரியாற்றின் தென்
கரையிலுள்ள குரங்காடு துறை இப்பொழுது ஆடுதுறை என்றே
வழங்குகின்றது.
தேவாரப் பாமாலை பெற்ற அப் பதியில் வாலியின்
தம்பியாகிய சுக்கிரீவன் ஈசனை வழிபட்டான்
என்னும் ஐதிகம் உண்டு.
இன்னும், திருச்சி நாட்டுப் பெரம்பலூர் வட்டத்தில் வட
வெள்ளாற்றங்கரையில் மற்றொரு
குரங்காடுதுறையுள்ளது. ஆடுதுறை யென
வழங்கும் அப்பதியின் பழமை
|