2ஊரும் பேரும்

 நானிலம் என்ற பெயர் பூமிக்கு அமைவதாயிற்று.3 ஆயினும் பிற்காலத்தில்
 பாலையும் ஒரு தனி நிலமாகக் கொள்ளப்பட்டது.

                     
குறிஞ்சி நிலம்
 

மலை

    தமிழ் நாட்டில் வளமார்ந்த மலைகள் பலவுண்டு. அவற்றைச் சார்ந்து
எழுந்த ஊர்களிற் சிலவற்றை ஆராய்வோம்: தமிழகத்தின் வடக்கெல்லையாக
விளங்குவது திருவேங்கடமலை. தொல்காப்பியர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ப்
புலவர் ஒருவர்,

    “வடவேங்கடம் தென்குமரி
     ஆயிடைத்
     தமிழ்கூறு நல்லுலகத்து”4

என்று தமிழ்நாட்டின் எல்லைகளை வரையறை செய்துள்ளார். இவ்வாறு வட
சொற்கும், தென் சொற்கும் வரம்பாக நின்றமையால், தமிழ் நாட்டார், அம்
மலையை வடமலை என்று வழங்கலாயினர்.5 தொன்று தொட்டுத்
தெய்வமணம் கமழ்தலால், அது திருமலை என்றும்,திருப்பதி என்றும்
பெயர் பெற்றது.6

    பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையின் அருகே ஆனை மலையும்
சிறு மலையும் பசுமலையும் அமைந்திருக்கின்றன. ஆனை மலையில்

முற்காலத்தில் சமண முனிவர்கள் பெருந் தொகையினராய் வாழ்ந்தார்கள்.
இக்காலத்தில் இனிய வாழைக் கனி தரும் சிறுமலையும் பழம் பெருமை
வாய்ந்த தாகும். அம் மலையின் செழுமையைச் சிலப்பதிகாரம் அழகுற
எழுதிக் காட்டுகின்றது.7