தீயோரை இறைவன் சுட்டெரித்தமையால் அவ்விடம் வீரட்டானம் என்று
பெயர் பெற்ற தென்பர். “ஒன்னார் புரங்கள் செற்றவர் வாழும்
திருவதிகைப்பதி” என்று சேக்கிழார் கூறுமாற்றால் இவ் வைதிகம்
விளங்குவதாகும்.
கெடில நதித் துறையில் அமைந்த அவ் வீரட்டானத்திறைவனைக்
கெடிலவாணர் என்றும், கெடிலப் புனலுடையார் என்றும் திருநாவுக்கரசர்
பாடி யருளினார். இங்ஙனம் கெடில நதியுடைய பெருமானாய் விளங்கிய
ஈசனை,
“அறிதற் கரியசீர் அம்மான் தன்னை
அதியரைய மங்கை அமர்ந்தான் தன்னை
எறிகெடிலத் தானை இறைவன் தன்னை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே”
என்று அவர் இரங்கிப் பாடினார். இப்பாட்டில் காணும் அதியரைய
மங்கையே அதிகை யெனக் குறுகி வழங்க லாயிற்று.
திருக்கோவலூர்-வீரட்டம்
மற்றொரு வீரட்டானம் திருக்கோவலூர் ஆகும். அது பெண்ணை
யாற்றின் தென்கரையில் உள்ளது. முன்னாளில் சேதி நாடென்றும்,
மலாடென்றும் பெயர் பெற்றிருந்த நாட்டின்
தலைநகரமாகத் திருக் கோவலூர்
விளங்கிற்று.2
பின்னாளில் அவ்வூர் மேலூர் என்றும், கீழூர்
என்றும்
பிரிவுற்றது. மேலூரே
திருக்கோயிலூர் என இன்று வழங்கி
வருகின்றது.3
தேவாரப் பாமாலை பெற்ற வீரட்டானம் கீழுரில் உள்ளது. |