அம்பலவாணர்க்கு அவ்வம்பலமும் உரியதென்பர்.
“அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்
கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில்
வெள்ளி யம்பலத்து நள்ளிருட் கிடந்தேன்”
என்று சிலப்பதிகாரப் பதிகம் அதனைக் குறிக்கின்றது. பொன்னம்பலம்,
வெள்ளியம்பலம் ஆகிய இரண்டும் தமிழ்
நாட்டுப் பஞ்ச சபைகளுள் சிறந்தனவாகப்
பாராட்டப் பெறும்.10
அடிக் குறிப்பு
1. வீரஸ்தானமே வீரட்டானம் என்பர். அவற்றைத் தொகுத்துக் கூறுகின்றது ஒரு பாட்டு.
“பூமன் திருக்கண்டி அந்தகன் கோவல் புரம் அதிகை
மாமன் பறியல் சயந்தான் விற்குடி மாவழுவூர்
காமன் குருக்கை நமன்கடவூர் இந்தக் காசினிக்குள்
தேமன்னு கொன்றைச் சடையான் பொருதிட்ட சேவகமே”
2. திருத் தொண்டர்களுள் ஒருவராகிய மெய்ப் பொருள் நாயனார் திருக்கோவலூரில் இருந்து
அரசாண்ட குறுநில மன்னர் என்பது திருத்தொண்டர் புராணத்தால் அறியப்படும்.
“சேதிநன் னாட்டின் நீடு திருக்கோவ லூரின் மன்னி
மாதொரு பாகர் அன்பின் வழிவரும் மலாடர் கோமான்”
என்று அவர் குறிக்கப்படுகின்றார். மலையமான் நாடு மலாடென்றும், அந் நாட்டினர் மலாடர்
என்றும், அவர்தம் மன்னர் மெய்ப்பொருள் நாயனார் என்றும் கூறுவர். (திருத்தொண்டர்
புராண வுரை, ப. 578.) |