222ஊரும் பேரும்

                                            தலமும் கோவிலும்

கருவூர்-ஆனிலை

 

    பழங் காலத்தில் தமிழ் நாட்டிற் சிறந்து விளங்கிய நகரங்களுள் ஒன்று
கருவூர் ஆகும். அதன் பெருமையைச் சங்க நூல்களும் சமய நூல்களும்
எடுத்துரைக்கின்றன. “திருமா வியனகர்க் கருவூர்” என்று அகநானூறும்,
“தொன் னெடுங் கருவூர்” என்று திருத்தொண்டர் புராணமும் கூறுதலால்
அதன் செழுமையும் பழமையும் நன்கு புலனாகும். ஆன்பொருநை
என்னும் ஆம்பிராவதி யாற்றின் வடகரையில் அமைந்த கருவூர் பண்டைச்
சோழ மன்னர் முடி புனைந்து கொண்ட பஞ்ச நகரங்களுள் ஒன்று என்பர்.
அங்குள்ள சிவாலயம் ஆனிலை என்னும் பெயருடையது.1 “அரனார்

வாழ்வது ஆனிலை யென்னும் கோயில்” என்பது சேக்கிழார் திருவாக்கு.
அக் கோயிலுக்குப் பசுபதீச்சரம் என்ற வடமொழிப் பெயரும் உண்டு.

 

கருவிலி-கொட்டிட்டை


     பிறப்பும் இறப்பும் அற்றவன் ஈசன் என்று சைவ சமயம் கூறும். அந்த
முறை பற்றியே இளங்கோவடிகளும் “பிறவா யாக்கைப் பெரியோன்” என்று
சிலப்பதிகாரத்தில் சிவபெருமானைக் குறித்துப் போந்தார். பிறப்பற்ற
தன்மையைக் கருவிலி என்னும் சொல் உணர்த்துவதாகும். அதுவே ஒரு
பாடல் பெற்ற தலத்தின் பெயராகவும் வழங்குகின்றது. தஞ்சை நாட்டு
நன்னில வட்டத்தில் கருவிலி என்னும் ஊர் உள்ளது. பரமன் பெயரே
பகுதிக்கு அமைந்தது போலும்!. அங்கு ஈசன் கோயில் கொண்ட இடம்
கொட்டிட்டை என்று