இன்னும், காஞ்சியில் உள்ள மற்றொரு கோயில் ஓணகாந்தன் தளி. அது
கச்சி ஏகம்பத்திற்கு
மேற்கே அரை மைல் தூரத்தில் அமைந்திருக்கின்றது.
“ஓணகாந்தன் தளியுளீரே” என்று சுந்தரராற்
பாடப்பட்ட ஆலயம் அதுவே.
பழையாறை-வடதளியும்,
மேற்றளியும்
“பாரின் நீடிய பெருமை சேர்பதி பழையாறை” என்று சேக்கிழாரால்
புகழப்பட்ட பதியில் இரண்டு
தளிகள் உள்ளன. அவற்றுள் வடதளி என்னும்
திருக்கோயிலைச் சமணர் மறைத்து
வைத்திருந்தனர்
என்றும், திருநாவுக்கரசர்
உண்ணா நோன்பிருந்து அதனை
வெளிப்படுத்தினர் என்றும் தேவாரம்
கூறும்.2 இன்னும், பழையாறைப்
பதியில் மேற்றளி என்ற திருக்கோயிலும் உண்டென்பது,
“திருவாறை மேற்றளியில்
திகழ்ந்திருந்த செந்தீயின்
உருவாளன்”
என்னும் சேக்கிழார் வாக்கால் விளங்கும்.
ஓமாம்புலியூர்
வடதளி
ஓமாம் புலியூர் என்னும் பாடல் பெற்ற பதியில் உள்ள ஈசன் கோயில்
வடதளி யென்பது தேவாரத்தால்
தெரிகின்றது.
“உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்
புலியூரெம் உத்தமனைப் புரமூன் றெய்த
சிலையானை வடதளியெம் செல்வம் தன்னை”
என்பது திருநாவுக்கரசர் வாக்கு.
|