256ஊரும் பேரும்

                           ஈச்சுரம்
   ஈசன் என்னும் பெயராற் குறிக்கப்படுகின்ற சிவபிரான் உறையும் கோயில்
ஈச்சுரம் எனப்படும். தேவாரப் பாமாலை பெற்ற ஈச்சுரங்கள் பல உண்டு.
அவற்றுள் சிலவற்றைத் தொகுத்துரைத்தார் திருநாவுக்கரசர்.

     
“நாடகமாடிடம் நந்திகேச்சுரம் மாகாளேச்சுரம்
      நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன்கான
      கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம்

      குக்குடேச்சுரம் அக்கீச்சுரம்”

என்று கூறிச் செல்கின்றது அவர் திருப்பாசுரம்.
 

நந்தீச்சுரம்


   இக் காலத்தில் மைசூர் என்று பெயர் பெற்றுள்ள எருமை நாட்டில்
நந்தீச்சுரம் என்னும் சிவாலயம் முன்னாளிற் சிறந்து விளங்கிற்று. தமிழ்
மன்னர் அக் கோயிலின் பெருமையை அறிந்து போற்றினார்கள் என்பது

சாசனத்தால் புலனாகின்றது.1 நந்தீச்சுரமுடையார்க்கு முதற் குலோத்துங்க
சோழன் பசும் பொன்னாற் செய்த பட்டம் சாத்தினான் என்று ஒரு சாசனம்
கூறும்.2 இக் கோவிலைத் தன்னகத்தே யுடைய ஊர் நந்தி என்று
வழங்கலாயிற்று. எனவே, நந்தியில் உள்ள நந்தீச்சுரம் திருநாவுக்கரசரால்
குறிக்கப்பட்ட வைப்புத்தலம் என்று கருதலாகும்.
 
மாகாளேச்சுரம் 
 

   மாகாளம் என்னும் பெயர் பெற்ற திருக்கோயில் மூன்றுண்டு.
அரிசிலாற்றங் கரையில் உள்ள அம்பர் மாகாளம் ஒன்று.