26ஊரும் பேரும்

இடம் பெற்றிருக்கின்றன. இராமநாதபுரத்து நீராவி யென்ற ஊரிலும், சேலம்
நாட்டுக் கல்லாவியிலும் ஆவியைக் காணலாம். மதுரையைச் சேர்ந்த கோடல்
வாவி முதலிய ஊர்கள் வாவியின் அருகே எழுந்தனவாகத் தோற்றுகின்றன.

மடு
 

     ஆழமான நீர் நிலை மடு வெனப்படும். அச்சொல்லைக் கொண்ட
ஊர்ப் பெயர்களும் உண்டு. நெல்லை நாட்டுக் கல் மடுவும், தஞ்சை நாட்டு
முதலை மடுவும், தென்ஆர்க்காட்டு ஆனை மடுவும், சேலம் நாட்டுச் செம்
மடுவும் இத்தகையனவாகும்.

இலஞ்சி

     இலஞ்சி என்னும் சொல்லும் ஏரியைக் குறிக்கும்.81 நெல்லை நாட்டில்
தென்காசிக்கு அருகே இலஞ்சி என்ற ஊர் சிறந்து விளங்குகின்றது. செல்வச்
செழுமையால் பொன்னிலஞ்சியென்று புகழ்ந்துரைக்கப்பட்ட அவ்வூர், பயிர்த்
தொழிலுக்கு பயன்படுகின்ற குளத்தின் பெயரையே கொண்டுள்ளது.82
 

பொய்கை


     இயற்கையில் அமைந்த நீர்நிலை பொய்கை எனப்படும். பொய்கையார்
என்பது ஒரு பழந்தமிழ்ப் புலவரின் பெயர். அவர் பொய்கை என்ற ஊரில்
பிறந்தவர் என்பர். இன்னும் முதலாழ்வார்கள் என்று அழைக்கப்படுகின்ற
மூவரில் ஒருவர் பொய்கை ஆழ்வார். காஞ்சிபுரத்திலுள்ள திருவெஃகா
என்னும் திருமால் கோயிலை அடுத்துள்ள தாமரைப் பொய்கையிற்
பிறந்தவராதலால் அவர் பொய்கை ஆழ்வார்