தேவும் தலமும்317

கூறப்படுகின்றது. ஆயினும் நாளடைவில் கோவிற் பெயரே ஊர்ப் பெயராயிற்
றென்று தோன்றுகின்றது. இந் நாளில் தஞ்சை நாட்டுப் பாபநாச வட்டத்தில்
உள்ள இரும்புதலை என்னும் ஊரே பழைய இரும்புதல் ஆகும்.

ஏமநல்லூர்

     ஏம நல்லூர் ஒரு வைப்புத் தலம் என்பது, “எச்சிலிளமர் ஏமநல்லூர்”
என்னும் திருநாவுக்கரசர் வாக்கால் அறியப்படும். தஞ்சைப் பெருங்கோயிற்
சாசனம் ஒன்றில், “மண்ணி நாட்டு ஏம நல்லூராகிய திரைலோக்கிய
மகாதேவி சதுர் வேதி மங்கலம்” என்ற வாசகம் வருகின்றது.5
அச்சாசனத்தால் முற்காலத்தில் ஏம நல்லூர் என்று பெயர் பெற்றிருந்த ஊர்
பிற்காலத்தில் ஒரு மாதேவியின் பெயர் கொண்ட மங்கல மாயிற் றென்பது
விளங்கும். இந்நாளில் தஞ்சை நாட்டுக் கும்ப கோண வட்டத்திலுள்ள திரை
லோக்கி என்ற ஊரே பழைய ஏமநல்லூர்.

ஏமப்பேரூர்

     ஏமப்பேரூர் என்னும் வைப்புத் தலம் தென்னார்க்காட்டுத்
திருக்கோயிலூர் வட்டத்தில் உள்ள தென்று தெரிகின்றது. இப்பொழுது
ஏமப்பேர் என வழங்கும் அவ்வூரில் பழமையான சிவாலயம் ஒன்று உண்டு.
அதன் பெயர் திரு ஆலந்துறை என்று சாசனம் அறிவிக்கின்றது.6
இராசராசன் காலத்துக் கல்வெட்டு ஆலந்துறைக் கோயிலிற் காணப்படுதலால்
அதன் பழைமை நன்கு விளங்கும். திருவாரூருக்குத் தெற்கே ஆறு மைல்
தூரத்தில் மற்றோர் ஏமப்பேரூர் உண்டு. அது நமிநந்தியடிகள் என்னும்
திருத்தொண்டர் பிறந்த பதியாகும்.