326ஊரும் பேரும்

சிறையிடப்பட்ட பிரமதேவனை விடுவித்த பெருமையை அவ்வூர்ப் பெயர்
உணர்த்தும் என்பது புராணக் கொள்கை. இதற்கேற்ப அங்கு
முருகப்பெருமான் இன்றும் சிறப்பாக வழிபடப் பெறுகின்றார். பிரமதேவனை
விடுவித்த பின்னர், தாரக மந்திரமாகிய பிரணவத்தின் பொருளை முருகன்
வாயிலாகக் கேட்டு மகிழ்ந்தமையால் தாரக பரமேசுரர் என்னும் நாமம்
அங்குள்ள ஈசனுக்கு அமைந்தது. ஆலயத்தின் ஒரு புறம் திருமாலின்
திருவுருவம் காணப்படுகின்றது. இங்ஙனம் கந்தனார் தந்தையார்
விரும்பியுறையும் இடம் இப்பொழுது கொண்டல் வள்ளுவக்குடி என்னும்
பெயரால் வழங்குகின்றது.

மிழலை

     மூவர் தேவாரமும் பெற்ற மூதூர்களில் ஒன்று திருவீழிமிழலை.
இவ்வூர் வெண்ணி நாட்டில் உள்ளதென்று சாசனம் கூறும். மாதொரு
பாகற்குரிய மற்றொரு மிழலையும் உண்டு என்று சுந்தரர் அருளிப்
போந்தார். அது “மிழலை நாட்டு மிழலை” யாகும். மிழலை நாடெனப்
படுவது மாயவரத்திற்கு அண்மையில் அமைந்ததாகும். அப் பகுதியில்
மாயவரத்திற்கு மேற்கே பன்னிரண்டு மைல் தூரத்தில் பாழடைந்த ஊராக
இம்மிழலை காணப்படுகின்றது.

நாங்கூர்

     நாங்கூர் நாட்டு நாங்கூர் நாதன் உறையும் இடம் என்றார் சுந்தரர்.
இத் தலம் சீர்காழிக் கருகே யுள்ள திருநாங்கூர் ஆகும். இவ்வூரிலுள்ள
சிவாலயம் பழுதுற்றிருப்பதாகத் தெரிகின்றது. சிதம்பரத்தில்நடம் புரியும்
இறைவன்மீது திரு இசைப்பாவும் பல்லாண்டும் பாடிய சேந்தனார் பிறந்த
ஊர் திரு நாங்கூரே.