336ஊரும் பேரும்

மதுராந்தகன், சோழாந்தகன் முதலிய விருதுப் பெயர்களோடு இணைந்த
சதுர்வேதி மங்கலம் சோழ நாட்டிலும் பாண்டி நாட்டிலும் உள்ளன.
செங்கற்பட்டைச் சேர்ந்த மதுராந்தகம் என்னும் ஊர் மதுராந்தகன் நிறுவிய
சதுர்வேதி மங்கலம். அவ் வண்ணமே மதுரைக் கருகேயுள்ள சோழ வந்தான்
என்ற ஊர் சோழந்தகனால் உண்டாக்கப்பட்ட சதுர்வேதி மங்கலம்.

     தஞ்சை நாட்டு மன்னார்குடி வட்டத்தில் பெரு வளந்தான் என்னும்
ஊர் உள்ளது. பெரு வாழ்வு தந்த பெருமாள் சதுர்வேதி மங்கலம் என்பது
அதன் முழுப் பெயராகும்.15

     பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த செம்பி நாட்டில் வீரநாராயண
சதுர்வேதிமங்கலம் என்னும் ஊர் விளங்கிற்று. திருச்செந்தூர்ப் பிள்ளைத்
தமிழ் பாடிப் பெருமை யுற்ற பகழிக் கூத்தர் அவ்வூரிலே பிறந்தவர். “செம்பி
நாட்டு வீர நாராயணச் சதுர்வேதி மங்கலம் விளங்க வந்தவர்”16 என்று
சிறப்புப் பாயிரச் செய்யுள் ஒன்று கூறுதலால் இவ்வுண்மை விளங்கும்.
சன்னாசி கிராமம் என்று அவ்வூர் இந் நாளில் வழங்கும்.

     வட ஆர்க்காட்டுப் போளூர் வட்டத்தில் மகாதேவ மங்கலம் என்னும்
ஊர் ஒன்று உள்ளது. அதன் பழம் பெயர் மகாதேவி மங்கலம்
என்பதாகும்.17 செங்கற்பட்டில் உள்ள மணிமங்கலம் என்ற ஊர் இராஜராஜன்
தேவியாகிய உலக மாதேவியின் பெயரால் அமைந்த சதுர்வேதி மங்கலம்.18

      தஞ்சை வட்டத்தில் மன்னார் சமுத்திரம் என்னும் மறு பெயருடைய
செந்தலை என்ற ஊர் உள்ளது. சந்திரலேகை