கிரி, அசலம்
என்னும் சொல் சிவகிரி, புவனகிரி முதலிய ஊர்ப் பெயர்களிலே
அமைந்துள்ளது. அசலம் என்ற
வடசொல்
விருத்தாசலம், வேதாசலம்,
வேங்கடாசலம்,
தணிகாசலம் முதலிய பெயர்களில் வழங்கும்.17
சைலம், அத்திரி
இன்னும் சைலம், அத்திரி என்னும் வடசொற்களையும் இரண்டோர்
ஊர்ப்பெயர்களிலே காணலாம்.
நெல்லை
நாட்டில் பொதிய மலைத்
தொடரின்
அடிவாரத்திலுள்ள சின்னஞ் சிறிய ஊர்
ஒன்று,
சிவசைலம் என்று
பெயர் பெற்றுள்ளது. வானமாமலை என்னும்
நாங்குனேரிக்குத் தோத்தாத்திரி
என்ற வடமொழிப் பெயரும் உண்டு.
குறிச்சி
முன்னாளில் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் குறவர் என்று பெயர்
பெற்றனர். அன்னார்
குடியிருந்த இடம் குறிச்சி என்று குறிக்கப்பட்டது.
‘குறிச்சி எங்கள் குறச்சாதி குடியிருப்ப
தம்மே'18 என்று ஒரு குறவஞ்சி
கூறுமாற்றால் இவ்வுண்மை இனிது விளங்கும்.
பொதிய மலைத் தொடரின்
அடிவாரத்தில்
குறிச்சி என்ற பெயருடைய ஊர்கள் பல
உண்டு. ஆழ்வார்
குறிச்சி முதலாகப் பல
குறிச்சிப் பெயர்களைத் தொகுத்து
வழங்கும் முறையும்
நெல்லை நாட்டில் உள்ளது. ஆதியில்
குறிச்சி என்பது
குறவர் குடியிருப்பைக்
குறித்ததாயினும், பிற்காலத்தில் மற்றைய குலத்தார்
வாழும் சிற்றூர்களும்
அப்பெயர் பெற்றன. ஆர்க்காட்டு வட்டத்தில்
கள்ளக்குறிச்சி என்பது
ஓர்
ஊரின் பெயர். இராமநாதபுரத்தில் பிராமணக்
குறிச்சி என்னும் ஊர் உள்ளது. |