குடியும் படையும் 83

அடையாளம் ஒன்றும் அங்கு இல்லை. தஞ்சை மாநகரைச் சோழ மன்னர்கள்
தலை நகராகக் கொள்வதற்கு முன்னே வல்லம் என்னும் கோட்டை,
கள்ளரில் ஒரு வகுப்பாருடைய தலை நகரமாகச் சிறந்திருந்தது. வல்லத்தில்
அரசு புரிந்த குடியினர் வல்லத்தரசு என்னும் பட்டம் பெற்றனர். வல்லம்
சீரிழந்த பின்னர் வல்லத்தரசுகள் கள்ளர் முதுகுடியில் கலந்துவிட்டார்கள்.
 

கோட்டை

     கோட்டை என்பது அரணைக் குறிப்பதற்கு பெரும்பான்மையாக
எங்கும் வழங்கும் சொல்லாகும். முற்காலத்தில் மண்ணால் அமைந்திருந்த
கோட்டைகளும், பிற்காலத்தில் கல்லாற் கட்டப்பட்ட கோட்டைகளும்
இன்றும் பல இடங்களிற் காணப்படுகின்றன. பாண்டி நாட்டில்
நிலக்கோட்டை என்பது ஓர் ஊரின் பெயர். அங்குப் பாளையக்காரன்
ஒருவன் கட்டிய மட்கோட்டை இன்றும் உள்ளது. நிலக்கோட்டையின்
அருகே சிறு மலையின் சாரலில் குலசேகரன் கோட்டை என்னும் ஊர்
உண்டு. பாண்டி மன்னனாகிய குலசேகரன் பெயரை அக்கோட்டை தாங்கி
நிற்கின்றது. இன்னும், நிலக் கோட்டைக்கு அண்மையிலுள்ள மற்றொரு
கோட்டை தொடியன் கோட்டை என்று பெயர் பெற்றுள்ளது. வடுகர்
இனத்தைச் சேர்ந்த தொட்டியத்தலைவன் ஒருவன் அக் கோட்டையைக்
கட்டுவித்தான் என்பர்.

     மதுரையைச் சேர்ந்த திருமங்கலத்துக்கு அண்மையில் கீழக் கோட்டை,
மேலக் கோட்டை, நடுக் கோட்டை என மூன்று கோட்டைகள்
அமைந்துள்ளன. தொண்டைமான்