பக்கம் எண் :

பக்கம் எண் :18

5. ஆருகத சமயத்துப் பெண்பால் துறவிகள்

     ஆருகத சமயத்துப் பெண்பால் துறவிகளுக்குக் கந்தி அல்லது கௌந்தி என்று பெயர் வழங்கப்பட்டது. என்னை?

    ‘‘நந்திய பிண்டி வாமன் நன்னெறி வழாது நோற்பாள்
    கந்தியே அவ்வை அம்மை கன்னியே கௌந்தி என்ப.’’

என்று சூடாமணி நிகண்டு கூறுகிறது. பிங்கல நிகண்டு,

    ‘‘பைம்மையும் கௌந்தியும் அருந்தவப் பெண் பெயர்.’’

என்றும், திவாகர நிகண்டு,

     ‘‘பைம்மையும் கௌந்தியும் அருந்தவப் பெண் பெயர்.’’

என்றும் கூறுகின்றன. சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிற கௌந்தியடிகள், சமணசமயத்துப் பெண்பால் துறவியாவர். மைசூரில் உள்ளதும் சமணரின் முக்கியத்திருப்பதிகளுள் ஒன்றுமான சமணர் வெள்ளைக்குளம் என்னும் பொருள் உள்ள சிரவண பௌகொள என்னும் இடத்தில் சமணசமயச் சார்பான சாசனங்கள் பல காணப்படுகின்றன. அந்தச் சாசனங்களில் சில கந்தியார்களின் பெயர்கள் கூறப்படுகின்றன. அவை வருமாறு:- நாகமதி கந்தியார், சசிமதி நந்தியார், நவிலூர் சங்கம் ஆஜிகணத்தைச் சேர்ந்த ராஜ்ஞிமதி கந்தியார், அநந்தமதி கந்தியார், ஸ்ரீமதி கந்தியார், மாங்கப்பெ கந்தியார் முதலியன.

     சமணசமயப் பெண்பால் துறவிகளுக்கு ஆர்யாங்களை என்னும் பெயரும் உண்டு. ஆர்யாங்கனைகள் அல்லது கந்தியார்கள் ஒழுகவேண்டிய சில முறைகளைப்பற்றி நீலகேசி உரையில் இவ்வாறு கூறப்படுகிறது:- ‘‘ரிஷிகள் (சமண முனிவர்) பி¬க்ஷக்குப் புக்க கிருஹத்து ஆர்யாங்கனையைக் காணின் முட்டுப்பாடு கொண்டு மீள்கவென்றும், அவர்களும் ரிஷிகளைக் கண்ட கிருஹத்துப் பி¬க்ஷ கொள்ளாது மீள்க வென்றும், ரிஷிகள் இருக்கும் பள்ளியுள் ஆர்யாங்கனைகள் இருக்கப் பெறாரென்றும், ஆர்யாங்கனைகள் இருக்கும் பள்ளியுள் ரிஷிகள் இருக்கப் பெறாரென்றும், ரிஷிகள் ரிஷிகள்பாற் றுறக்க, ஆர்யாங்கனைகள் ஆர்யாங்கனைகள்பாற்றுறக்க வென்றும் , அத்யயனமும் இவ்வாறே செய்கவென்றும் விதிக்கின்ற பரமாகம முடையார் அவ்வாறே இன்றுகாறும் அனுஷ்டிக்கின்றார்கள்.’’

                        (நீலகேசி: மொக்கல: 57. உரை.)

     குரத்தி என்னும் பெயரும் சமணசமயப் பெண்பால் துறவிகளுக்கு வழங்கி வந்தது. குரத்தி என்னும் பெயர் குரு என்பதன் பெண்பாற்பெயர் ஆகும். பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், சாசனங்கள் முதலியவற்றில் குரத்தி என்னும் சொல் வழங்கப்பட்டுள்ளது.

    ‘‘சாமி குரத்தி பெருமாட்டி ஆசாள் தலைவி ஐயை
    நாமங் கவுந்தியும் பைம்மையும் ஆருகதத்துத் தவப்பெண்.’’

என்பது கயாதர நிகண்டு.

     ஸ்ரீ மிழலூர்க் குரத்தியார், சிறிவிசையக் குரத்தியார், நால்கூர்க் குரத்திகள், இளநேச்சுரத்துக் குரத்திகள், அரிட்டநேமிக் குரத்திகள், திருப்பருத்திக் குரத்திகள், கூடற் குரத்தியார் முதலிய பெயர்கள் சாசனங்களில் காணப்படுகின்றன.

     வடஆர்க்காடு மாவட்டம் வாலாஜாபேட்டைத் தாலுகா விளாப்பாக்கத்தில் உள்ள நாகநாதேசுவரர் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டுச் சாசனம், பட்டினிக் குரத்தி அடிகள் என்பவரைக் குறிப்பிடுகிறது. பட்டினிக் குரத்தி அடிகள் இவ்வூரில் சமணப் பெண்பள்ளியை (மடத்தை) நிறுவின செய்தி இச் சாசனத்தில் கூறப்படுகிறது:-

     ஸ்வஸ்தி ஸ்ரீ மதுரை கொண்ட கோப்பர கேசரிவர்மர்க்கு யாண்டு முப்பத்தெட்டாவது, படுவூர்க் கோட்டத்துப் பெருந் திமிரிநாட்டு விளாப்பாக்கத்துத் திருப்பான் மலை அரிஷ்டநேமி படாரர் மாணாக்கியார் பட்டினி குரத்தி அடிகடேன் கண்ட கினறு. இது இவ்வூர் இருபத்து நால்வரை இரக்ஷ¤ப்பதாகவும், இம் மனையும் கிணறும் பெண்பள்ளி யாவதாகவும், இத் தர்மங் கெடுத்தார் கெங்கையிடைக் குமரியிடைச் செய்தார் செய்த பாவத்திற்படுவார். ஊர் பணிக்க எழுதினேன் இவ்வூர்க் கருமான் இலாடாச்சனேன¢245.

     ஆர்யாங்கனைகள் என்றும் கௌந்திகள் என்றும் குரத்திகள் என்றும் கூறப்பட்ட சமணசமயப் பெண்பால் துறவிகள், தலையை மழித்து வெள்ளிய ஆடை அணிந்திருந்தனர். இவர்கள் சமய நூலையும் இலக்கண இலக்கிய நூல்களையும் நன்கு பயின்று இருந்தனர். இவர்கள் பெற்றிருந்த கல்வியறிவின் சிறப்புக்குச் சிந்தா மணியின் இடைச் செருகல் பாட்டுக்களே சான்று பகரும்.

     திருத்தக்க தேவர் இயற்றிய சிந்தாமணிக் காவியம் 2,700 செய்யுட்களை யுடையது. இக் காவியத்தில் இப்போது 450 செய்யுட்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்த அதிகப்படியான செய்யுட்களைக் கந்தியார் என்னும் ஆருகத சமயத் துறவியார் புதிதாக இயற்றி இடைச் செருகலாக அமைத்துவிட்டார் என்பர். திருத்தக்க தேவருடைய திருவாக்குப் போன்றே கந்தியாரின் இடைச் செருகற் பாக்களும் அமைந்துள்ளபடியால், தேவரின் செய்யுள் எது கந்தியாரின் இடைச் செருகல் செய்யுள் எது என்று கண்டறிய முடியாதபடி இருக்கின்றன. இத்தகைய திறமை வாய்ந்த பெரும் புலவர்கள் கந்தியார்களில் இருந்தார்கள் என்றால், அவர்கள் கல்வியில் உயர்ந்த நிலை பெற்றிருந்தார்கள் என்பது ஐயமற விளங்குகிறதன்றோ? இத்தகைய கந்தியார்களும் குரத்தியார்களும், இல்லறத்தில் உள்ள பெண் மக்களுக்கு ஆருகதக் கொள்கைகளையும் அறவுரைகளையும் புகட்டிவந்தனர்.

______________________________________________________________________________

      245. S.I.I. Vol. Vii. No. 56