பக்கம் எண் :

பக்கம் எண் :20

7. சமணசமயப் புகழ்ப்பாக்கள்

நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா

முத்தொடு மணிதயங்கு முக்குடைக்கீழ் முனைவனாய்
எத்திசையும் பல்லுயிர்கள் இன்புற இனிதிருந்து
பத்துறு காவதம் பகைபசி பிணிநீங்க
உத்தமர்கள் தொழுதேத்த ஒளிவரை செலவினோய்

எள்ளனைத்து மிடமின்றி எழில்மாண்ட பொன்னெயிலின்
உள்ளிருந்த உன்னையே யுயிர்த்துணையென் றடைந்தோரை
வெள்ளில்சேர் வியன்காட்டுள் உறைகென்றால் விழுமிதோ.

குணங்களின் வரம்பிகந்து கூடிய பன்னிரண்டு
கணங்களும்வந் தடியேத்தக் காதலித்துன் னடைந்தோரைப்
பிணம்பிறங்கு பெருங்காட்டில் உறைகென்றல் பெருமையோ.

விடத்தகைய வினைநீக்கி வெள்வளைக்கைச் செந்துவர்வாய்
மடத்தகைய மயிலனையார் வணங்கநின் னடைந்தோரைத்
தடத்தரைய காடுறைக வென்பதுநின் தகுதியோ.
எனவாங்கு,
எனைத்துணையை யாயினும் ஆகமற் றுன்கண்
தினைத்துணையும் தீயவை யின்மையிற் சேர்தும்
வினைத்தொகையை வீட்டுக வென்று. (1)

வஞ்சிப்பா

கொடிவாலன குருநிறத்தான குறுந்தாளன
வடிவாலெயிற் றழலுளையன வள்ளுகிரன
பணையெருத்தின் இணையரிமா னணையேறித்

துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி
எயில்நடுவண் இனிதிருந் தெல்லோர்க்கும்
பயில்படுவினை பத்தியலால் செப்பியோன்
புணையெனத்
திருவுறு திருந்தடி திசைதொழ
வெருவுறு நாற்கதி வீடுநனி எளிதே. (2)

ஆசிரியத் தாழிசை

நீடற்க வினையென்று நெஞ்சி னுள்ளி
நிறைமலருஞ் சாந்தமொடு புகையும் நீவி
வீடற்குந் தன்மையினான் விரைந்து சென்று
விண்ணோடு மண்ணினிடை நண்ணும் பெற்றி
பாடற்கும் பணிதற்கும் தக்க தொல்சீர்
பகவன்றன் அடியிணையைப் பற்று நாமே. (3)

இடையிடை குறைந்து இடைமடக்காய் வந்த ஆசீரிய

இணைக்குறட்டுறை

போதுறு முக்குடைப் பொன்னெயில் ஒருவன்
தாதுறு தாமரை அடியிணை பணிந்தார்
தாதுறு தாமரை அடியிணை பணிந்தார்
தீதுறு தீவினை இலரே. (4)

கலிவெண்பா

பண்கொண்ட வரிவண்டும் பொறிக்குயிலும் பயில்வானா
விண்கொண்ட வசோகின்கீழ் விழுமியோர் பெருமானைக்
கண்ணாலும் மனத்தாலும் மொழியாலும் பயில்வார்கள்
விண்ணாளும் வேந்தரா வார். (5)

வெண்கலிப்பா

நாகிளம்பூம் பிண்டிக்கீழ் நான்முகனாய் வானிறைஞ்ச
மாகதஞ்சேர் வாய்மொழியான் மாதவர்க்கு மல்லார்க்கும்
தீதகல எடுத்துரைத்தான் சேவடிசென் றடைந்தார்க்கு
மாதுயரம் தீர்தல் எளிது. (6)

ஆசிரியப்பா

போது சாந்தம் பொற்ப வேந்தி
ஆதி நாதற் சேர்வோர்
சோதி வானம் துன்னு வாரே. (7)

அணிநிழல் அசோகமர்ந் தருள்நெறி நடாத்திய
மணிதிகழ் அவிரொளி வரதனைப்
பணிபவர் பவநனி பரிசறுப் பவரே. (8)

நேரிசை யாசிரிப்பா

உலகுடன் விளக்கும் ஒளிதிகழ் அவிர்மதி
மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை
அறிவுசேர் உள்ளமொடு அருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தர தென்ப
பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே. (9)

வண்ணம்

தாழி யோங்கும்மலர்க் கண்ணவர் தண்ணடி
பாழி யோங்கு புனலார் பழையாற்றுள்
காழி நின்றம் மதியான் மதிசேர்ந்து
வாழி என்று வணங்க வினைவாரா. (10)

பிணியார் பிறவிக் கடலுட் பிறவா வகைநா மறியப்
பணியாய் மணியார் அணைமேல் பணியா ஒருமூ வுலகும்
கணியா துணருங் கவினார் கலைமா மடவாள் கணவா
அணியார் கமலத் தலரா சனனே அறவா ழியனே. (11)

ஆதிநாதர் பந்தம் நீக்குறில்
பாத மூலம் அந்த மில்குணத்
நீதியாய் நின் தெந்தை பாதமே
றோது நெஞ்சே. (12) சிந்தி நெஞ்சமே. (13)

திரித்து வெங்கயம் பாடு வண்டு பாண்செயும்
உரித்து நல்லறம் நீடு பிண்டி நீழலான்
விரித்த வேதியர்க் வீடு வேண்டு வார்க்கெலாம்
குரித்தென் உள்ளமே. (14) ஊடு போக்கும் உத்தமன் (15)

முரன்று சென்று வட்டின
நிரந்து பிண்டி நீழலுள்
பரந்த சோதி நாதனெம்
அரந்தை நீக்கும் அண்ணலே. (16)

வினையைத் தான்மிடைந் தோட்டிநீர்
அனகைத் தானருள் காண்குறிற்
கனகத் தாமரைப் பூமிசைச்
சினனைச் சிந்திமின் செவ்வனே. (17)

ஆதி யானற வாழியி னான் அலர்ச்
சோதி யான்சொரி பூமழை யான்வினைக்
காதி வென்றபி ரானவன் பாதமே
நீதி யால்நினை வாழிய நெஞ்சமே. (18)

பொங்கு சாமரை தாம்வீசச்
சிங்க பீடம் அமர்ந்தவெங்

கொங்கு சேர்குளிர் பூம்பிண்டிச்
செங்க ணானடி சேர்மினே. (19)

போது விண்ட புண்ட ரீக
மாத ரோடு வைக வேண்டின்
ஆதி நாதர் ஆய்ந்த நூலின்
நீதி யோடு நின்மின் நீடு. (20)

ஒருதிரள் பிண்டிப் பொன்னெயில் மூன்றின்
ஈரறம் பயந்த நான்முக வண்ண
மூவகை உலகிற்கும் ஒருபெருங் கடவுள்,
நால்வகை யோனியுள் இருவினை கடிந்து
முந்நெறி பயந்த செந்நெறி ஒருவன்,
நால்வகை யளவையும் இருவகைப் பண்பும்
ஒன்ற உரைத்த முக்குடைச் செல்வன்
ஈரடி பரவினர் என்ப
பேரா நன்னெறி பெறுகிற் போரே. (21)

எழுகூற்றிருக்கை

ஒருபொருட் கிருதுணி புரைத்தனை ஒருகால்
இருபிறப் பாளர்க்கு மூவமிழ் தாக்கி
ஈரறம் பயந்த ஓரருள் ஆழியை,
இருமலர் நெடுங்கண் அரிவையர் தம்மொடு
மூவகை யுலகில் நால்வகைத் தேவரும்
மும்மையின் இறைஞ்சும் ஈரடி ஒருவனை
இருவினை பிரித்து மூவெயில் முருக்கி
நாற்கதி தவிர்த்த வைங்கதித் தலைவ
நான்மறை யாள மும்மதிற் கிழவ
இருகுணம் ஒருமையில் தெரிவுறக் கிளந்த
இருசுடர் மருட்டும் முக்குடைச் செல்வ
நால்வகை வருணமும் ஐவகைக் குலனும்

ஆறறி மாந்தர்க் கறிவுற வகுத்தனை
ஐந்நிற நறுமலர் முன்னுற ரந்தி
நாற்பெரும் படையொடு மும்முறை வலங்கொண்
டிருகையுங் கூப்பி ஒருமையின் வணங்கி
அரசர் நெருக்குறூஉம் முரசுமுழங்கு முற்றத்து
இருநிதிப் பிறங்கலோ டிமையவர் சொரிதலின்
முருகயர் வுயிர்க்கும் மும்மலர் மாரியை
நால்வகை யனந்தமும் நயந்தனை தேவரின்
ஐவகை விழைவு மையற வெய்தினை
ஆறுபுரி நிலையும் தேறினர்க் கியம்பினை
எழுநயம் விரித்த திருமறு மார்பினை
அறுபொருள் அறைந்தனை ஐம்பதம் அருளினை
நான்குநின் முகமே மூன்றுநின் கண்ணே
இரண்டுநின் கவரி ஒன்றுநின் அசோகே
ஒரு தன்மையை இருதிறத்தினை
முக்குணத்தினை நால்வகையினை
ஐம்பதத்தினை அறுபிறவியை
ஏழகற்றிய மாதவத்தினை
அரிமருவிய மணியணையினை
வளர்கதிரொளி மண்டலத்திணை
அதனால்
மாகெழு நீழல் கேவலந் தோற்றிய
ஆதியங் குரிசில்நிற் பரவுதும்
தீதறு சிவகதி சேர்கயாம் எனவே. (22)

வஞ்சிப்பா


வினைத் திண்பகை விழச் செற்றவன்
வனப் பங்கய மலர்த் தாளிணை
நினைத் தன்பொடு தொழுதேத்தினர்
நாளும்,

மயலார் நாற்கதி மருவார்
பெயரா மேற்கதி பெறுகுவர் விரைந்தே. (23)

வஞ்சிப்பா

வானோர்தொழ வண்தாமரைத்
தேனார்மலர் மேல்வந்தருள்
ஆனாவருள் கூரறிவனைக்
கானார்
மலர்கொண் டேத்தி வணங்குநர்
பலர்புகழ் முத்திபெறுவர் விரைந்தே. (24)

தாளோங்கிய தண்பிண்டியின்
நாள்மலர்விரி தருநிழற்கீழ்ச்
சுடர்பொன்னெயில் நகர்நடுவண்
அரியணைமிசை யினிதமர்ந்தனை
அதனால்
பெருந்தகை அண்ணல்நிற் பரசுதும்
திருந்திய சிவகதி சேர்கயாம் எனவே. (25)

வெள்ளொத்தாழிசை

பாதார் நறும்பிண்டிப் பொன்னார் மணியணிப்புனல்
தாதார் மலரடியைத் தணவாது வணங்குவோர்
தீதார் வினைகெடுப்பர் சென்று. (26)

வஞ்சிப்பா

அங்கண்வானத் தமரரசரும்

வெங்களியானை வேல்வேந்தரும்
வடிவார்கூந்தல் மங்கையரும்
கடிமலரேந்திக் கதழ்ந்திறைஞ்சச்
சிங்கஞ்சுமந்த மணியணைமிசைக்

கொங்கவிர் அசோகின் குளிர்நிழற்கீழ்ச்
செழுநீர்ப்பவளத் திரள்காம்பின்
முழுமதிபுரையும் முக்குடைநீழல்
வெங்கண்வினைப்பகை விளிவெய்தப்
பொன்புனைநெடுமதில் புடைவளைப்ப
அனந்தசதுட்டய மவைவெய்த
நனந்தலையுலகுட னவைநீங்க
மந்தமாருதம் மருங்கசைப்ப
அந்தர துந்துபி நின்றியம்ப
இலங்குசாமரை நின்றியம்ப
நலங்கிளர்பூமழை நனிசொரிதர
இனிதிருந்து
அருள்நெறி நடாத்திய வாதிதன்
திருவடி பரவுதும் சித்திபெறற் பொருட்டே. (27)

வஞ்சிப்பா

பூந்தண்சினை மலர்மல்கிய பொழிற்பிண்டி
வேந்தன்புகழ் பரவாதவர் வினைவெல்லார்
அதனால்
அறிவன தடியிணை பரவிப்
பெறுகுவர் யாவரும் பிறவியில் நெறியே. (28)

வெண்கலிப்பா

வாளார்ந்த மழைத்தடங்கண் வனமுலைமேல் வம்பனுங்க
கோளார்ந்த பூணாகங் குழைபுரளக் கோட்டெருத்தின்
மாலைதாழ் கூந்தலார் வரன்முறையால் வந்தேத்தச்
சோலைதாழ் பிண்டிக்கீழ்ச் சூழ்ந்தவர்தம் சொன்முறையால்
மனையறமும் துறவறமும் மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும்
வினையறுக்கும் வகைதெரிந்து வீட்டொடுகட் டிவையுரைத்த

தொன்முறைசால் கழிகுணத்தெம் துறவரசைத் தொழுதேத்த
நன்மைசால் வீடெய்து மாறு. (29)

நிலைவெளி விருத்தம்>

ஏதங்கள் நீங்க எழிலினம் பிண்டிக்கீழ்ப் - புறாவே
வேதங்கள் நான்கும் விரித்தான் விரைமலர்மேல் - புறாவே
பாதம் பணிந்து பரவுதும் பல்காலும் - புறாவே. (30)

ஆசிரிய விருத்தம்

கங்கணக்கைப் பைந்தார்க் கனைகழற்காற்
கருவரைபோல் நீண்டமார்பிற் காமர்கோலம்
பொங்கிய சாமரை பொற்பவேந்திப்
புடைநின் றியக்கர்கள் போற்றிவீசச்
சி¢௨கஞ்சுமந் துயர்ந்தவா சனத்தின்மேற்
சிவகதிக்கு வேந்தாகித் தேவர்ஏத்த
அங்கம்பயந்த அறிவனாகிய அறப்படைமூன்
றாய்ந்தானடி யடைவா மன்றே. (31)

கொங்கு தங்கு கோதை யோதி மாத ரோடு
கூடி நீடும் ஓடை நெற்றி
வெங்கண் யானை வேந்தர் போந்து வேதகீத
நாத வென்று நின்று தாழ
அங்க பூர்வம் ஆதி யாய ஆதி நூலின்
நீதி யோதும் ஆதி யாய
செங்கண் மாலைக் காலை மாலை சேர்வர்
சோதி சேர்ந்த சித்தி தானே. (32)

ஆசிரிய விருத்தம்

சோதி மண்டலம் தோன்றுவ துளதேல்,
சொரியும் மாமலர் தூமழை யுளதேல்,

காதிவென்றதோர் காட்சியும் உளதேல்,
கவரி மாருதம் கால்வன உளவேல்,

பாத பங்கயம் சேர்நரும் உளரேல்,
பரம கீதமும் பாடுநர் உளரேல்,

ஆதி மாதவர் தாமரு குளரேல்,
அவரை யேதெரிந் தாட்படு மன்னே. (33)

முருகு விரிகமலம்
மருவு சினகரன்
திருவ டிகள்தொழுமின்
அருகு மலமகல. (34)

துங்கக் கனகச் சோதி வளாகத்
தங்கப் பெருநூல் ஆதியை யாளும்
செங்கட் சினவேள் சேவடி சேர்வார்
தங்கட் கமரும் தண்கடன் நாடே. (35)

வஞ்சிப்பா

மந்தாநில மருங்கசைப்ப
வெண்சாமரை புடைபெயர்தரச்
செந்தாமரை நாண்மலர்மிசை
என வாங்கு
இனிதி னொதுங்கிய விறைவனை
மனமொழி மெய்களின் வணங்குது மகிழ்ந்தே. (36)
பணையெருத்தி னிணையரிமா னணையேந்தத்
துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி

எயினடுவ ணினிதிருந் தெல்லோர்க்கும்

பயில்படுவினை பத்திமையாற் செப்பினோன்

புணையெனத்

திருவுறு திருந்தடி திசைதொழ

விரிவுறு நாற்கதி வீடுநனி யௌ¤தே. (37)


கோழியுங் கூவின குக்கில் குரல்காட்டுந்
தாழியி ணீலத் தடங்கணீர் போதுமினோ

ஆழிசூழ் வையத் தறிவ னடியேத்திக்

கூழை நனையக் குடைந்து குரைபுனல்

ஊழியு மன்னுவா மென்றேலோ ரெம்பாவாய் (38)
அருந்தவர்கட் காதியா யைய நீங்கி
ஒளவியந்தீர்ந் தவிரொளிசே ராக்கை யெய்தி
யிருந்திரட்டை யினமருப்பின் யானை யூர்தி
யீரைஞ்ஞூ றெழினொட்டத் திமையோ னேத்த
வொருங்குலகி னூற்கற்ற வோத முந்நீ
ரொளிவளர வறம்பகர்ந்த வுரவோன் பாதம்
கருங்கயற்கட் காரிகையார் காத னீக்கிக்
கைதொழுதாற் கையகலுங் கவ்வை தானே. (39)

அனவரத மமர ரரிவையரோ டணுகி யகனமரு முவகை
யதுவிதியி னவர வணிதிகழ வருவ ரொருபாற்
கனவரையொ டிகலு மகலமொளி கலவு கரகமல நிலவு
கனகமுடி கவினு கழலரசர் துழனி யொருபால்
தனவரத நளின சரணநனி பரவு தகவுடைய முனிக
டரணிதொழ வழுவி றருமநெறி மொழிவ ரொருபாற்
சினவரன பெருமை தெரியினிவை யவன திருவிரவு கிளவி
தெனிரு மொழி யளவு சிவபுரம தடைத றிடனே. (40)

இடங்கை வெஞ்சிலை வலங்கை வாளியி னெதிர்ந்த தானையை
யிலங்கு மாழியின் விலக்கியோள்
முடங்கு வாலுளை மடங்கன் மீமிசை முனிந்து சென்றுடன்
முரண்ட ராசனை முருக்கியோள்
வடங்கொண் மென்முலை நுடங்கு நுண்ணிடை மடந்தை சுந்தர
வளங்கொள் பூமழை மகிழ்ந்தகோன்
தடங்கொள் தாமரை யிடங்கொள் சேவடி தலைக்கு வைப்பவர்
தமக்கு வெந்துயர் தவிர்க்குமே. (41)

ஒருமன மாந்தர் மூவகை யுலகி
னிருமனம் பட்டு நாற்கதி யுழல்வோரே
இருமனம் பட்டு நாற்கதி யுழல்வோர்
ஒருமன மாகி மூன்றுதிரி விலரே
மூன்று திரிவறிந்து முதலொன் றறிந்தோர்
ஆன்ற நாற்கதி யிரண்டன் வரவிலரே
யான்ற நாற்கதி யிரண்டன் வரவுடையோர்
மேற்செயன் மூன்றி னொன்றுணர்ந் தோரே. (42)

பிணியார் பிறவிக் கடலுட் பிறவா வகைநா மறியப்
பணியாய் மணியா ரணைமேற் பணியா வொரூமூ வுலகுங்
கணியா துணருங் கவினார் கலைமா மடவாள் கணவா
வணியார் கமலத் தலரா சனனே யறவா ழியனே. (43)

திருகிய புரிகுழ லரிவைய ரவரொடு
திகழொளி யிமையவரும்
பெருகிய கரிகுல மருவிய படையொடு
பிரிதலி லரசவைய
முருகுடை மலரொடு வழிபட முனிகளை
நனியக லாவருகன
திருவடி முறைமுறை யடைபவ ரடைகுவ
ரமரொளி யமருலகே. (44)

நாகிளம்பூம் பிண்டிக்கீழ் நான்முகனாய் வானிறைஞ்ச
மாகதஞ்சேர் வாய்மொழியான் மாதவர்க்கு மல்லார்க்கும்
தீதகல வெடுத்துரைத்தான் சேவடிசென் றடைந்தார்க்கு
மாதுயரந் தீர்த லௌ¤து. (45)

பண்கொண்ட வரிவண்டும் பொறிக்குயிலும் பயில்வானா
விண்கொண்ட வசோகின்கீழ் விழுமியோர் பெருமானைச்
கண்ணாலும் மனத்தாலும் மொழியாலும் பயில்வார்கள்
விண்ணாலும் வேந்தரா வார். (46)

வஞ்சிப்பா

பார்பரவிய பருவரைத்தாய்
கார்கவினிய கதழொளியாய்
நீர்மல்கிய நீண்மலரவாய்
திறமல்கிய தேனினமுமாய்,
அதனால்
மொய்ம்மலர் துவன்றிய தேம்பாய்
மலரடியிணையை வைத்தவா மனனே. (47)

முரன்று சென்று வட்டின
நிரந்த பிண்டி நீழலுள்
பரந்த சோதி நாதனெம்
அரந்தை நீக்கு மண்ணலே. (48)

முருகவிழ்தா மரைமலர்மேன் முடியிமையோர் புடைவரவே
வருசினநா தருமறைநூல் வழிபிழையா மனமுடையார்
இருவிளைபோய் விழமுறியா வெதிரியகா தியையெறியா
நிருமலரா யருவினராய் நிலவுவர்சோ தியினிடையே. (49)

முழங்கு களியானை மூரிக் கடற்படை முறிதார் மன்னர்
வழங்கு மிடமெல்லாந் தன்புகழே போக்கிய வைவேல் விண்ணன்
செழுந்தண்பூம் பழசையுட் சிறந்ததுநா ளுஞ்செய
வெழுந்த சேதிசத் துள்ளிருந்த வண்ணலடி
விழுந்தண்பூ மலர்களால் வியந்துநா ளுந்தொழத்
தொடர்ந்துநின் றவ்வினை துறந்துபோ மாலரோ. (50)

வினையைத் தான்மிடைந் தோட்டிநீர்
அனகைத் தானருள் காண்குறிற்

கனகத் தாமரைப் பூமிசைச்

சினனைச் சிந்திமின் செவ்வனே. (51)

அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா

தரவு


நலங்கிளர் திருமணியு நன்பொன்னுங் குயின்றழகார்
இலங்கெயிற் றழலரிமா னெருத்தஞ்சே ரணையின்மேல்
இருபுடையும் இயக்கரசர் இணைக்கவரி எடுத்தெறிய
விரிதாமம் துயல்வரூஉம் வெண்குடைமூன் றுடனிழற்ற
வண்டரற்ற நாற்காதம் வகைமாண உயர்ந்தோங்கும்
தண்டளிர்ப்பூம் பிண்டிக்கீழ்த் தகைபெறவீற் றிருந்தனையே.

தாழிசை

ஒல்லாத பிறப்புணர்ந்தும் ஒளிவட்டம் புடைசூழ
எல்லார்க்கும் எதிர்முகமா யின்பஞ்சேர் திருமுகத்துள்
ஏர்மலர மணிப்பொய்கை எழிலாம்பல் பொதியவிழ
ஊர்களோ டுடன்முளைத்த ஒளிவட்டத் தமர்ந்தனையே;

கனல்வயிரங் குறடாகக் கனல்பைம்பொன் சூட்டாக
இனமணி யாரமா இயன்றிருள் இரிந்தோட
அந்தரத் துருளுநின் அலர்கதிர் அறவாழி
இந்திரனும் பணிந்தேத்த இருவிசும்பில் திகழ்ந்தன்றே;

வாடாத மணமாலை வானவர்கள் உள்ளிட்டார்
நீடாது தொழுதேத்த நிறஞ்சேர்ந்த பெருங்கண்ணு
முகிழ்பரிதி முகநோக்கி முறுவலித் துண்ணெகிழ்ந்து
திகழ்தகைய குடைபுடைசூழ் திருந்துகழல் திளைத்தன்றே.

அம்போதரங்கம்

நாற்சீர் ஈரடி

மல்லல் வையம் அடிதொழு தேத்த
அல்லல் நீத்தக் கறப்புணை யாயினை
ஒருதுணி வழிய உயிர்க்கர ணாகி
இருதுணி யொருபொருட் கியல்வகை கூறினை.

நாற்சீர் ஓரடி

ஏடலர் தாமரை ஏந்தும் நின்னடி
வீடொடு கட்டினை விளக்கும் நின்மொழி
விருப்புறு தமனியம் விளக்கும் நின்நிறம்
ஒருத்தல் கூடுற வுஞற்றும் நின்புகழ்.

ழுச்சீரோரடி

இந்திரற்கும் இந்திரன்நீ; இணையில்லா இருக்கையைநீ;
மந்திரமொழியினைநீ; மாதவர்க்கு முதல்வனும்நீ;
அருமைசால் அறத்தினைநீ; ஆருயிரும் அளித்தனைநீ;
பெருமைசால் குணத்தினைநீ; பிறர்க்கறியாத் திறத்தினைநீ

இருசீர் ஓரடி

பரமன்நீ; பகவன்நீ; பண்பன்நீ; புண்ணியன்நீ;
உரவன்நீ; குரவன்நீ; யூழிநீ; உலகுநீ;
அருளும்நீ; அறமும்நீ; அன்பும்நீ; அணைவும்நீ;
பொருளும்நீ; பொருப்புநீ; பூமியும்நீ; புணையும்நீ;
எனவாங்கு,

சுரிதகம்

அருள்நெறி ஒருவநிற் பரவுதும் எங்கோன்

திருமிகு சிறப்பிற் பெருவரை யகலத்து
எண்மிகு தானைப் பண்ணமை நெடுந்தேர்
அண்ணல் யானைச் செங்கோல் விண்ணவன்
செருமுனை செருக்கறத் தொலைச்சி
ஒருதனி வெண்குடை ஓங்குக எனவே. (52)

தலையளவு அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா

தரவு

அலைகடற் கதிர்முத்தம் மணிவயிர மவையணிந்து
மலையுறைமா சுமந்தேந்து மணியணைமேல் மகிழ்வெய்தி
யோசனைசூழ் திருநகருண் ணுலகொருமூன் றுடனேத்த
ஈசனையா மினிதமர்ந்தங் கிருடிகட்கு மிறைவற்கும்
அருளறமே யறமாக வயலார்கள் மயலாக
இருளறநன் கெடுத்தியம்பி யிருவினைகள் கடிந்திசினோய்.

தாழிசை

துன்னாத வினைப்பகையைத் துணிசெய்யுந் துணிவினையாய்
இன்னாத பகைமுனைபோல் எரித்தடக்கு நினைப்பினால்
இருளில்லா வுணர்வென்னு மிலங்கொளியா லெரித்தனையா
யருளெல்லா மடைந்தெங்கண் ணருளுவதுன் னருளாமோ
மதிபுரைமுக் குடைநீழல் மகிழ்வெய்தி யடைந்தோரைக்
கதிர்பொருதக் கருவரைமேற் கதிர்பொருத முகம்வைத்துக்
கொன்முனைபோல் வினைநீங்கக் குளிர்நிழற்கண்
மகிழ்ந்தனிர்போ
னின்மினீ ரெனவுரைத்தல் நிருமலநின் பெருமையோ
மனைதுறந்து வளம்புகுமின் மலமறுக்கல் உறுவீரேல்
வினையறுக்க லுறுவார்க்கு விழுச்செல்வம் பழுதென்றிங்
கலகில்லாப் பெருஞ்செல்வத் தமரரசர் புடைசூழ
வுலகெல்லா முடன்றுறவா வுடைமையுநின் னுயர்வாமோ.

அராகம்

அரைசரும் அமரரும் அடிநிழல் அமர்தர
முரைசதிர் இமிழிசை முரணிய மொழியினை.

பேரெண்

அணிகிளர் அவிர்மதி யழகெழில் அவிர்சுடர்
மணியொளி மலமறு கனலி நின்னிறம்
மழையது மலியொலி மலிகடல் அலையொலி
முறைமுறை யரியது முழக்கம் நின்மொழி.

இடையெண்

வெலற்கரும் வினைப்பகை வேரொடும் வென்றனை
சொலற்கரு மெய்ப்பொருள் முழுவதும் சொல்லினை
அருவினை வெல்பவர்க் கரும்புணை ஆயினை
ஒருவனை யாகி யுலகுடன் உணர்ந்தனை.

சிற்றெண்


உலகுடன் உணர்ந்தனை உயிர்முழு தோம்பினை
நிலவுறழ் நிறத்தினை, நிழலிய லியாக்கையை
மாதவர் தாதையை, மலர்மிசை மகிழ்ந்தனை
போதிவர் பிண்டியை, புலவருட் புலவனை
எனவாங்கு,

சுரிதகம்

அருளுடை ஒருவநிற் பரவுதும் எங்கோன்
இருளறு திகிரியொடு வலம்புரித் தடக்கை
ஒருவனை வேண்ட இருநிறங் கொடுத்த
நந்தி மால்வரைச் சிலம்பு நந்தி
ஒற்றைச் செங்கோல் ஓச்சிக்
கொற்ற வெண்குடை நிழற்றுக எனவே. (53)

இடையளவு அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா

தரவு

பிறப்பெண்ணும் பிணிநீங்கப் பிரிவரிய வினைக்கடலை
அறப்புணையே புணையாக மறுகரைபோய்க் கரையேறி
இறப்பிலநின் அருள்புரிந்தாங் கெமக்கெல்லா மருளினையாய்
மறவாழி ஒளிமழுங்க மனையவர்க்கும் முனையவர்க்கும்
அறவாழி வலனுயரி யருள்நெறியே யருளியோய்.

தாழிசை

அருளெல்லா மகத்தடக்கி யடிநிழலை யடைந்தோர்க்குப்
பொருளெல்லாம் நீவிளங்கப் புகரில்லா வகையினால்
இருளில்லா மனஞானம் இயம்பியதுன் இயலாமோ.
தீதில்லா நயமுதலாத் திருந்தியநல் லளவைகளால்
கோதில்லா அரும்பொருளைக் குறைவின்றி யறைந்ததற்பின்
பேதில்லா வியற்காட்சி யருளியதுன் பெருமையோ.
துணையில்லாப் பிறப்பிடைக்கண் துயரெல்லாம் உடனகல
புணையில்லா உயிர்கட்குப் பொருளில்லா அருளினால்
இணையில்லா நல்லொழுக்க மிசைத்ததுநின் னிறைமையோ.

அராகம்

அருள்புரி திருமொழி அமரரும் அரசரும்
மருள்வரு மனிதரும் மகிழ்வுற இயம்பினை.

பேரெண்

பூமலர் துதைந்த பொழிலணி கொழுநிழல் தேமல ரசோகினை
தூமலர் விசும்பின் விஞ்சையர் பொழியும் மாமலர் மாரியை.

இடையெண்

காமரு கதிர்மதி முகத்தினை
சாமரை யிடையிடை மகிழ்ந்தனை
தாமரை மலர்புரை யடியினை
தாமரை மலர்மிசை ஒதுங்கினை.

சிற்றெண்

அறிவனைநீ. அதிசயன்ந.¦
யருளினைநீ. பொருளினைநீ.
உறுவனைநீ. உயர்ந்தனைநீ.
உலகினைநீ. அலகினைநீ.
எனவாங்கு,

சுரிதகம்

இணையை ஆதலின் முனைவருள் முனைவ
நினையுங் கால நின்னடி யடைதும்
ஞானமும் காட்சியும் ஒழுக்கமும் நிறைந்து
துன்னிய தீவினைத் துகள்தீர்
முன்னிய பொருளது முடிகவெமக் கெனவே. (54)

கடையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா

தரவு

கடையில்லா அறிவோடு ஞானமும் காட்சியும்

உடைமையா யுலகேத்த ஒண்பொருள தியல்புணர்ந்து

மறவாழி இறையவரும் மாதவரும் புடைசூழ

அறவாழி வலனுயரி யருள்நெறியே அருளியோய்.

தாழிசை

வினையென்னும் வியன்பகையை வேரோடு முடன்கீழ்ந்து
முனையவர்கள் தொழுதேத்த இருப்பதுநின் முறைமையோ.
பொருளாடல் புரியீரேல் புகர்தீரும் என அருளி
மருளானா மணியணைமேல் மகிழ்வதுநின் மாதவமோ.
வேந்தர்க்கும் முனைவர்க்கும் விலங்கிற்கும் மருள்துறவா
தோந்தீர்த் துறந்தநின் துறவரசுந் துறவாமோ.

அராகம்

முழுவதும் உணர்பவர் முனைவருள் முனைவர்கள்
தொழுதெழு துதியொலி துதைமலர் அடியினை

பேரெண்

நிழல்மணி விளையொளி நிகர்க்கும் நின்னிறம்
எழில்மதி இதுவென இகலும் நின்முகம்.

இடையெண்

கருவினை கடந்தோய்நீ.
காலனை யடர்ந்தோய்நீ.
ஒருவினையும் இல்லோய்நீ.
உயர்கதிக்கு முனைவன்நீ.

சிற்றெண்

அறவன்நீ. அமலன்நீ.
அருளும்நீ. பொருளும்நீ.
உறவுநீ. உயர்வுநீ.
உலகுநீ. அலகுநீ.
எனவாங்கு,

சுரிதகம்

அருளுடை ஒருவநின் அடியிணை பரவுதும்
இருளுடை நாற்கதி யிடர்முழு தகலப்
பாடுதற் குரிய பல்புகழ்
வீடுபே றுலகம் கூடுக எனவே. (55)

வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா

தரவு

தெரிவில்லா வினைகெடுத்துத் தீவினையிற் றெரிந்தோங்கிச்
சரிவில்லா இன்பத்தால் சங்கரனும், முழுதுலகும்
தெரிந்தொன்றி யுணர்ந்தநின் திப்பியஞா னந்தன்னால்
விரிந்தெங்கும் சென்றமையால் விண்ணுமாய் மண்ணின்மிசை
தேர்வுற்ற வாரீட நான்மையினும் திரிவில்லாச்
சார்வுற்ற நன்மையினும் சதுமுகனாய் உயர்ந்தனையே.

தாழிசை

இருக்கையு நூனெறிய தியல்வகையுந் தன்னாலும்
வருந்தாத கொள்கையால் மன்னுயிரைத் தலையளிப்போய்
தொடர்த்தமுக்கும் பிணியரசன் தொடர்ந்தோட ஞானத்தால்
அடர்த்தமுக்க வென்றதுநின் அறமாகிக் காட்டுமோ.

ஏதிலா வுயிர்களை எவ்வகைக் கதியகத்தும்
காதலால் உழப்பிக்கும் காமனைக் கறுத்தவன்
வடிவுகெடச் சிந்தையால் எரித்ததூஉம் வல்வினையைப்
பொடிபட வென்றதுநின் பொறையுடைமை ஆகுமோ.

எவ்வுயிர்க்கும் ஓரியல்பே என்பவை தமக்கெல்லாம்
செவ்விய நெறிபயந்து சிறந்தோங்கு குணத்தகையாய்
கொலைத்திறத்தால் கூட்டுண்ணுங் கூற்றப்பே ரரசனு
அலைத்தவனை வென்றதுநின் அருளாகிக் கிடக்குமே

அராகம்

தாதுறு நனைசினை தழலெழில் சுழல்சுழற்
கைவகை முகைநகு தடமலர் அசோகினை

சீருறு கெழுதகு செழுமணி முழுதணி
செறியுளை விலங்கரை சணிபொனி னணையினை.

வாருறு கதிரெதிர் மரகத நிரை நிரை
வரிபுரி தௌ¤மதி வெருவரு குடையினை.

போருறு தகையன புயலுளர் வியலொளி
புதுமது நறவின புனைமலர் மழையினை.

பொறிகிளர் அமரர்கள் புகலிடம் எனமனு
பொலிமலி கலிவெலும் பொருவறும் எயிலினை

வெறிகிளர் உருவின விரைவினி னினிதெழ
வெறிவரு தெரிதக வினிதுளர் கவரியை.

விறலுணர் பிறவியை வெருவரு முறைதரு
வியலெரி கதிரென மிடலுடை ஒளியினை.

அறிவுள ரமரர்கள் அதிபதி யிதுவெனக்
கடலுடை யிடிபட வெறிவன விசையினை.

பேரெண்

மன்னுயிர் காத்தலான் மறம்விட்ட அருளினோடு
இன்னுயிர் உய்கென்ன இல்லறமும் இயற்றினையே.
புன்மைசால் அறநீக்கிப் புலவர்கள் தொழுதேத்தத்
தொன்மைசால் குணத்தினால் துறவரசாய்த் தோற்றினையே.

இடையெண்

பீடுடைய இருக்கையைநின் பெருமையே பேசாதோ
வீடுடைய நெறிமையைநின் மேனியே விளக்காதோ

ஒல்லாத வாய்மையைநின் உறுபுகழே யுரையாதோ
கல்லாத அறிவுநின் கட்டுரையே காட்டாதோ.

சிற்றெண்

அறிவினால் அளவிலைநீ. அன்பினால் அசைவிலைநீ.
செறிவினால் சிறந்தனைநீ. செம்மையால் செழுங்கதிர்நீ.
காட்சியால் கடையிலைநீ. கணஞ்சூழ்ந்த கதிர்ப்பினைநீ.
மாட்சியால் மகிழ்வினைநீ. மணிவரைபோல் வடிவினைநீ.

அளவெண்

வலம்புரி கலந்தொருபால் வால்வளை ஞிமிர்ந்தொருபால்
நலந்தரு கொடியொருபால் நலம்புணர் குணமொருபால்
தீதறு திருவொருபால் திகழொளி மணியொருபால்
போதுறு மலரொருபால் புணர்கங்கை யாறொருபால்
ஆடியின் ஒளியொருபால் அழலெரி யதுவொருபால்
மூடிய முரசொருபால் முழங்குநீர்க் கடலொருபால்
பொழிலொடு கயமொருபால் பொருவறு களிறொருபால்
எழிலுடை ஏறொருபால் இணையரி மானொருபால்.
எனவாங்கு,

சுரிதகம்

இவைமுத லாகிய இலக்கணப் பொறிகிளர்
நவையில் காட்சி நல்லறத் தலைவநின்
தொல்குணந் தொடர்ந்துநின் றேத்துதும், பல்குணப்
பெருநெறி யருளியெம் பிறவியைத் தெறுவதோர்
வரம்மிகத் தருகுவை எனநனி
பரவுதும் பரமநின் அடியிணை பணிந்தே. (59)