பக்கம் எண் :

தமிழில் சமயம் - பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்169

மனிதன்தானோ! இவனுடைய இசைப் பாட்டு கல்மனத்தையுங் கனியச் செய்கின்றது. சீவகநம்பியின் வாய்ப்பாட்டும் வீணையும் நாதமும் இணைந்து தேனும் பாலும் கலந்தது போல இன்பம் அளிக்கின்றன. வீணையின் நாதமும் இசைப் பாட்டும் கலந்தொலிப்பதை இதோ இப்பாடல்களில் கேளுங்கள்.

கன்னி நாகங் கலங்க மலங்கி
மின்னும் இரங்கும் மழைஎன் கோயான்.
மின்னும் மழையின் மெலியும் அரிவை
பொன்ஞாண் பொருத முலைஎன் கோயான்

கருவி வானங் கான்ற புயலின்
அருவி அரற்றும் மலையென் கோயான்
அருவி அரற்றும் மலைகண் டழுங்கும்
மருவார் சாயல் மனம்என் கோயான்.’

வான மீனின் அரும்பி மலர்ந்து
கானம் பூத்த கார்என் கோயான்
கானம் பூத்த கார்கண் டழுங்கும்
தேனார் கோதை பரிந்தென் கோயான்.

சீவக நம்பியின் இசையமிர்தத்தைச் சபையோர் செவியாரப் பருகி இசை வசமாகின்றனர். பாட்டின் இசையும் யாழின் ஒலியும் அடங்கியவுடன் சபையோர் பளபளவென்று கைதட்டி ஆர்க்கின்றனர். எங்கும் மகிழ்ச்சி ஆரவாரம் எழும்புகிறது. ‘தெய்வப் பாட்டு! தேவகானம்! அமிர்தகானம்!’ என்று மெச்சிப் புகழ்கிறார்கள். மணமகள் காந்தருவதத்தையும் மகிழ்ச்சியடைகிறாள்.

‘சீவக நம்பி வென்றார்! சீவகச்சாமி வெற்றிபெற்றார்!’ என்று குரல்கள் கிளம்புகின்றன. ‘அவசரப்படாதே. மணமகள் பாடட்டும்’ என்று எதிர்க் குரல் எழும்புகிறது. இதோ, மணமகள் காந்தருவதத்தை இசை பாடத் தொடங்குகிறான். அமைதி நிலவுகிறது. எல்லோரும் உன்னிப்பாகக் கேட்கிறார்கள்.

கோதை புறந்தாழக் குண்டலமும் பொற்றோடும்
காதின் ஒளிர்ந் திலங்கக் காமர்நுதல் வியப்ப
மாதர் எருத்தம் இடங்கோட்டி மாமதுர
கீதங் கிடையிலாள் பாடத் தொடங்கினாள்.