பக்கம் எண் :

48மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

பிறைபொருத கனமகர கிம்புரிவன் கோட்டுப்
     பெருங்களிற்றுச் சோழனையும் மமைச்சரையும் பிடித்துச்
சிறையிலிடக் களிறுவிடு மிண்டன் சீயா
    திரிபுவனத் திராசாக்கள் தம்பிரானே.     4

ஒருநாளும் விடியாத நெடிய கங்கு
     லூழியென நீண்டுவர உலகிற் புன்கண்
மருண்மாலை யிதுமுன்னே வந்ததென்றால்
     மடந்தையிவ ளாற்றுவளோ மல்லைவேந்தே
பொருமாலை முடியரசர் கன்னிமாதர்
    போற்றிசெயும் புவனமுழு துடையார் தாமுந்
திருமாதும் புணர்புயத்து மிண்டன்சீய
    திரிபுவனத் திராசாக்கள் தம்பிரானே.     5

இது கோச் சீயன் ஆணை.

குறிப்பு :- செய்யுள் 1. அவனிநாராயணன் - இது கோப் பெருஞ் சிங்கனுடைய சிறப்புப் பெயர். இவனுடைய முன்னோனான தெள்ளாற்றெறிந்த நந்திவர்மனுக்கும் இந்தச் சிறப்புப் பெயர் உண்டு. பின்னி - பெண்ணையாறு ; தென்பெண்ணையாறு. இச்செய்யுளின் ஈற்றுச்சொல், யகரமெய் பெற்றுப் புகழ்வாரேய் என்றிருக்கிறது. இது அக்காலத்து முறை.

செய்யுள் 2. தெவ்வேந்திர் - பகையரசர்களே.

செய்யுள் 3. கோப்பெருஞ் சிங்கனுடைய கொடி விடைக் கொடி. அதாவது ஏற்றுக்கொடி. அவனுடைய முத்திரையும் ஏறு (எருது). இவனால் வெல்லப்பட்ட மன்னருடைய மார்பிலும் தோளிலும் இவனுடைய முத்திரையாகிய எருதின் உருவத்தை (பச்சைக்குத்தி) எழுதினான். இது, அவர்களை அவமதிப்பதாகும். இவ்வாறு அவமதிக்கப்பட்ட அரசர்கள், இவனால் சிறைபிடிக்கப்பட்டுச் சிறைச் சாலையில் இருந்து இறந்த சோழ அரசன் பட்ட துன்பத்தை விடப் பெரிய துன்பமாகக் கருதினார்கள் என்பது இச்செய்யுளின் கருத்து. போரில் வெற்றிப் பெற்ற அரசர், தமது முத்திரையைத் தோற்ற அரசரின் மார்பிலும் தோளிலும் பொறிப்பது அக்காலத்து வழக்கம்.