| 132 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
இதனால், புராண சாகரம் என்னும் நூல், வெண்பாவினால் அமைந்த நூல் என்பதும், பஃறொடை வெண்பாக்களும் இந்நூலில் இருந்தன என்பதும் தெரிகின்றன. இந்நூலைப் பற்றிய வேறு செய்திகள் தெரிய வில்லை. 9. விம்பசார கதை இப்பெயர் கொண்ட ஒரு நூல் இருந்ததென்பது, நீலகேசி என்னும் சமண சமய நூலுக்குச் சமய திவாகர வாமன முனிவர் எழுதிய உரையிலிருந்தும், சிவஞானசித்தியார் என்னும் சைவ சமய நூலுக்கு ஞானப்பிரகாசர் எழுதிய உரையிலிருந்தும் தெரிகிறது. நீலகேசியில் குண்டலகேசி வாதச் சருக்கத்தில், 41ஆவது செய்யுள் உரையில், உரையாசிரியர் வாமன முனிவர் இவ்வாறு கூறுகிறார்: “இவன் (புத்தர்) பிறக்கின்ற காலத்து மாதாவினது வலமருங்கு லாற் பிறந்தான்; அவளும் ஆறு நாட் குற்றுயிரோடு கிடந்து ஏழா நாளிறந்தாள். இது புத்த மாதாக்கள் யாவர்க்கு மொக்கும். என்னை? ‘உலும்பினி வனத்து ளொண்குழைத் தேவி வலம்படு மருங்குல் வடுநோ யுறாம லான்றோ னவ்வழித் தோன்றின னாதலி னீன்றோ ளேழ்நா ளின்னுயிர் வைத்தாள்.’ என்பது விம்பசார கதை யென்னுங்; காவியம்; பௌத்தருடையது. அதன்கட் கண்டுகொள்க.” சிவஞானசித்தியார் பரபக்ஷம், சௌத்திராந்திகன் மதமறு தலை, 5ஆவது: செய்யுளுரையில், உரையாசிரியர் ஞானப்பிரகாசர் கூறுவது வருமாறு: “புத்தன் பிறக்கிற காலத்து மாதாவினுடைய வல மருங்குலாற் பிறந்தான்; அவளு மாறு நாள் குற்றுயிரோடே கிடந்தேழா நாளிறந்தாள். இது புத்த மாதாக்களிருபத்துநால்வர்க்கு மொக்கும். இதற்கு உதாரணம். ‘உலும்பினி வனத்து ளொண்குழைத் தேவி வலம்படு மருங்குல் வடுநோ யுறாம லான்றோ னவ்வழித் தோன்றின னாதலி னீன்றோ ளேழ்நா ளின்னுயிர் வைத்தாள்.’ |