மறைந்துபோன தமிழ் நூல்கள் | 185 |
9. செயன்முறை செயன்முறை என்பது நாடகத்தமிழ் இலக்கண நூல் எனத் தெரிகிறது. இந்நூலை யாப்பருங்கல விருத்தியுரைகாரர் தமது உரையில் குறிப்பிடுகிறார். “கலியுறுப்புக்கு அளவை செயன்முறையுள்ளும், செயிற்றியத் துள்ளுங் கண்டுகொள்க. அவை யீண்டுரைப்பிற் பெருகும்.” என்று மேற்படி உரையாசிரியர் (யாப்பருங்கலம், செய்யுளியல் 29ஆம் சூத்திர உரை) எழுதுகிறார். செயன்முறை என்னும் இந்நூலைச் செயிற்றியம் என்னும் நாடகத்தமிழ் இலக்கண நூலுடன் சேர்த்து உரையாசிரியர் குறிப்பிடுகிறபடியினாலும், செயன்முறை என்னும் பெயரினாலும் இந்நூல் நாடகத்தமிழ் இலக்கண நூல் என்பது நன்கு தெரிகிறது. இந்நூலைப் பற்றியும், இந்நூலாசிரியரைப் பற்றியும் வேறு செய்தி ஒன்றும் தெரியவில்லை. 10. செயிற்றியம் செயிற்றியம், என்னும் நாடகத்தமிழ் இலக்கண நூல் ஒன்று இருந்தது என்பது சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரும், அரும்பத உரையாசிரியரும், இளம் பூரண அடிகளும், பேராசிரியரும், யாப்பருங்கலவிருத்தி யுரைகாரரும் ஆகிய உரையாசிரியர்களின் உரைகளினால் தெரிகிறது. செயிற்றியனார் என்பவர் செய்த நூல் ஆகலின் இதற்குச் செயிற்றியம் என்னும் பெயர் வாய்த்தது. இந்நூல், அடியார்க்கு நல்லார் காலத்திலேயே மறைந்துவிட்டது. என்னை? “நாடகத்தமிழ் நூலாகிய பரதம், அகத்திய முதலாகவுள்ள தொன்னூல்களு மிறந்தன, பின்னும் முறுவல் சயந்தம், குணநூல், செயிற்றியம் என்பனவற்றுள்ளும் ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணை யல்லது முதல் நடு இறுதி காணாமையின் அவையும் இறந்தனபோலும்” என்று சிலப்பதிகார உரைப் பாயிரத்தில் அவர் கூறுவது காண்க. செயிற்றியத்தைப் பற்றிப் பேராசிரியர் கூறுவதாவது: “இங்ஙனம் அடங்குமென்பது நாடக நூலுள்ளுஞ் சொல்லுப வோவெனின், சொல்லுபவாகலி னன்றே அதன் வழிநூல் செய்த |