மறைந்துபோன தமிழ் நூல்கள் | 199 |
ளினால் இந்நூலின் பெயர் தெரியவருகிறது. வீரைத் தலைவன் பாசய கோளரி மாமுனி என்பவர் இந்நூலை எழுதியவர். குலோத்துங்க சோழவர் என்னும் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இவர் இருந்தார். இந்த அரசனுடைய 41, 49ஆம் ஆண்டுகளில் இந்தச் சாசனங்கள் எழுதப்பட்டன. இந்தச் சாசனங்கள் செய்யுள் நடையில் எழுதப் பட்டுள்ளன. இந்த நூலாசிரியர், கன்னிவன புராணம், அஷ்டதச புராணம் என்னும் வேறு இரண்டு நூல்களையும் எழுதியிருக்கிறார். இந்நூல்களை எழுதியதற்காக இவர் பாலையூரில் நிலங்களை இறையிலியாகப் பெற்றார். மேற்படி கோயில் சாசனச் செய்யுள்களில் இது ஒன்று: “மாங்கொல்லை ... ... ரண்டு மாவொரு மாமுக்காணி யோங்க மறப்பெருஞ் செல்வி யொருகாணி ... ... பூவமர் காணியினிற் பூம்புலியூர் நாடகஞ்செய் நாவலன் பெற்ற நிலம்.”4 இந்தச் சாசனச் செய்யுள்களில் இடையிடையே சில எழுத்துகள் மறைந்துவிட்டன. இந்த நாடகநூல் இப்போது கிடைக்கவில்லை. 21. கடகண்டு, 22. வஞ்சிப்பாட்டு 23. மோதிரப்பாட்டு பேராசிரியர், தொல்காப்பிய உரையில் இந்நூல்களைக் குறிப்பிடுகிறார். தொல்., பொருள்., செய்யுளியல், 180ஆம் சூத்திரத்தில், பண்ணத்தி என்பதை விளக்குகிற இடத்தில் பேராசிரியர் இந்நூல்களைக் கூறுகிறார். அவர் கூறுவது இது: “மெய்வழக் கல்லாத புறவழக்கினைப் பண்ணத்தியென்ப. இது எழுதும் பயிற்சியில்லாத புறவுறுப்புப் பொருள்களைப் பண்ணத்தியென்ப வென்பது. அவையாவன நாடகச் செய்யுளாகிய பாட்டுமடையும் வஞ்சிப்பாட்டும், மோதிரப்பாட்டும், கடகண்டும் முதலாயின. அவற்றை மேலதே போலப் பாட்டென்னாராயினார். நோக்கு முதலாயின உறுப்பின்மையி னென்பது. அவை வல்லார் வாய்க் கேட்டுணர்க.” இதனால் மோதிரப்பாட்டு, வஞ்சிப்பாட்டு, கடகண்டு என்பன நாடகம் பற்றிய நூல்கள் எனத் தெரிகின்றன. |