பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்31

முகவுரை

(நூலாசிரியர், ராய்பகதூர் பெ. சுந்தரம்பிள்ளை யவர்கள் எழுதியது )

“ மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி
இறைவர்தம் பெயரை நாட்டி இலக்கணஞ் செய்யப் பெற்றே
அறைகடல் வரைப்பிற் பாடை யனைத்தும்வென் றாரி யத்தோ
டுறழ்தரு தமிழ்த்தெய் வத்தை உண்ணினைந் தேத்தல் செய்வாம்.”

“ இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர் இயல்வாய்ப்ப
இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசைபரப்பும்
இருமொழியும் ஆன்றவரே தழீஇனார் என்றாலிவ்
விருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதேயோ.”

“ கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை
மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ.”

என்றெடுத்த ஆன்றோர் வசனங்கள் உபசாரமல்ல, உண்மையேயென்பது பரத கண்டம் என்னும் இந்தியா தேசத்திலுள்ள பற்பல பாஷைகளைச் சற்றேனும் ஆராய்ந்து ஒப்பிட்டு நோக்கும் யாவர்க்கும் திண்ணிதிற் றுணியத் தக்கதே. பழமையிலும், இலக்கண நுண்மையிலும், இலக்கிய விரிவிலும் ஏனைய சிறப்புக்களிலும் மற்றக் கண்டங்களிலுள்ள எப்பாஷைக்கும் தமிழ் மொழி சிறிதும் தலை கவிழ்க்கும் தன்மையன்று. இவ்வண்ணம் எவ்விதத்திலும் பெருமைசான்ற இத் தமிழ்மொழி பற்பல காரணச் செறிவால், சில காலமாக நன்கு பாராட்டிப் பயில்வார் தொகை சுருங்க, மாசடைந்து நிலை தளர்ந்து, நேற்றுதித்த தெலுங்கு முதலிய பாஷைகளுக்கும் சமமோ தாழ்வோ என்று அறியாதார் பலரும் ஐயமுறும்படி அபிவிருத்தியற்று நிற்கின்றது. இக் குறைவு நீங்கத் தங்கள் தங்களுக் கியன்றவழி முயற்சிப்பது, தங்களை மேம்படுத்தும் தமிழ்மொழியைத் தம்மொழியாக வழங்கும் தமிழர்