பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் | 33 |
சம்பாதிப்பினும் நமது பூர்வார்ஜிதத்தின்முன் அஃது ஒரு பொருளாகத் தோற்றுமா’ என மனந்தளர்ந்து கைசோர்வார்க்கு அவர் பூர்வார்ஜிதப் பெருமை கேடு விளைவிப்பதாகவன்றோ முடியும். அந்தோ! இக் கேட்டிற்கோ நம் முன்னோர் நமக்காக வருந்தி யுழைத்துப் பொருளீட்டி வைக்கின்றார்கள் ! பிதிர்களாய் நிற்கும் அம் முன்னோர் இவ் விபரீத விளைவைக் கண்டால் நம்மை எங்ஙனம் வாழ்த்துவர்? இக் கூறிய உண்மை செல்வப் பொருளுக்கன்றிக் கல்விப் பொருளுக்கும் ஒரு குடும்பத்துள் வந்த ஒருவனுக்கன்றி ஒரு தேசத்திற் பிறந்த ஒவ்வொரு தலைமுறையாருக்கும் ஒன்று போலவே பொருத்தமுடையதாதலால், “ குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்” என்னும் திருக்குறளை நம்பி நம் முன்னோர் யாதேனும் ஒரு வழியில் அபரிமிதமான சிறப்படைந்தாராயின் நாமும் அவர் போலவே இயன்ற அளவும் முயன்று பெருமைபெறக் கருதுவதன்றோ அம் முன்னோர்க் குரிய மக்கள் நாமென முன்னிற்றற் கேற்ற முறைமை! “ தீங்கரும் பீன்ற திரள்கால் உளையலரி தேங்கமழ் நாற்றம் இழந்தாஅங்கு--ஓங்கும் உயர்குடி யுட்பிறப்பின் என்னாம் பெயர்பொறிக்கும் பேராண்மை இல்லாக் கடை.” ஆதலால் அருமையாகிய பூருவ நூல்களைப் பாதுகாத்துப் பயின்று வருதலாகிய முதற்கடமையோடு அவ் வழியே முயன்று அந்த அந்தக் காலநிலைக் கேற்றவாறே புது நூல்களை இயற்ற முயலுதல் தமிழ் நாடென்னும் உயர்குடியிற் பிறக்கும் ஒவ்வொரு தலைமுறையாருக்கும் உரித்தான இரண்டாம் கடமையாய் ஏற்படுகின்றது. மேற்கூறிய இரண்டாம் கடமையைச் சிரமேற்கொண்டு தமிழோர் என்னும் பெரிய குடும்பத்துள்ளே தற்காலத்துள்ள தலைமுறை யாருட் கல்வி கேள்வி அறிவு முதலிய யாவற்றுள்ளும் கனிஷ்டனாகிய சிறியேன், “ இசையா தெனினும் இயற்றியோ ராற்றால் அசையாது நிற்பதாம் ஆண்மை” என்னும் முதுமொழியைக் கடைப்பிடித்து நவீனமான பல வழிகளுள்ளும் என் சிறுமதிக் கேற்றதோர் சிறுவழியிற் சில காலம் முயன்று வடமொழி |