பிராகாரத்தில் பல்வேறு அம்பிகைகளின் வண்ணப் படங்கள்
மாட்டப்பட்டுள்ளன. கருவறையில் கோஷ்ட மூர்த்தங்கள் இல்லை.
தலபுராணம் உள்ளது. மாசியில் பெருவிழா நடைபெறுகிறது. வைகாசியில்
தியாகராஜ சுவாமி வசந்த உற்சவம் 15 நாள்கள், நடராசர் அபிஷேகங்கள்,
அன்னாபிஷேகம், நவராத்திரி, கந்தசஷ்டி, ஆருத்ரா, தைப்பூசம் முதலான
விழாக்கள் அனைத்தும் நடைபெறுகின்றன. பட்டினத்தார், காளமேகம்,
அருணகிரிநாதர், தியாகய்யர், முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோர் சுவாமி,
அம்பாள்மீது பாடல்களை - கீர்த்தனைகளைப் பாடியுள்ளனர்.
கோயிலை அடுத்துள்ள மார்க்கெட் பகுதியைக் கடந்து சிறிது தூரம்
சென்றால் எண்ணூர் நெடுஞ்சாலையில், சாலை ஓரத்தில் உள்ள
பட்டினத்தார் திருக்கோயிலை அடையலாம். பட்டினத்து அடிகள் முத்திப்
பேறு பெற்ற இடம்.
(உயர்நீதிமன்றப் பகுதியிலிருந்து எண்ணூர் போகும் நகரப் பேருந்தில்
ஏறி, எண்ணூர் நெடுஞ்சாலையில் திருவொற்றியூர் மார்க்கெட் நிறுத்தத்தில்
(Stop) இறங்கினால் சாலை ஓரத்தில் உள்ள இக்கோயிலை அடையலாம்).
பெயர் வளைவு உள்ளது. கடற்கரையையொட்டியுள்ள கிழக்கு நோக்கிய
சிறிய கோயில்.
பட்டினத்தார் இங்குதான் சமாதியடைந்துள்ளார். கோயிலுள் சிவலிங்கத்
திருமேனியும் எதிரில் நந்தியும் உள்ளன. இத்திருமேனிக்கும் மற்றும் உள்ள
விநாயகர், சுப்பிரமணியர், நடராசர் முதலிய உற்சவத் திருமேனிகளுக்கும்
நாடொறும் பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன. “பட்டினத்துப்
பெருமானுக்குப் பேய்க் கரும்பு இனித்த இடம் இஃது ஆகும். ஆதலின்
தனக்குரிய இடம் இதுவேயென்று முடிவுசெய்து கடற்கரையையொட்டிய
இவ்விடத்தில் சமாதியானார் என்பது வரலாறு.”
இங்கு ஆடித்திங்கள் உத்திராட நட்சத்திரத்தில் (பட்டினத்தார்)
குருபூஜை நடைபெறுகின்றது.
“விடையவன் விண்ணுமண்ணும் தொழநின்றவன் வெண்மழுவாட்
படையவன் பாய்புலித் தோலுடை கோவணம் பல்கரந்தைச்
சடையவன் சாமதேவன் சசிதங்கிய சங்க வெண்தோ(டு)
உடையவன் ஊனமில்லி உறையும் இடம் ஒற்றியூரே.”
(சம்பந்தர்)
“ஓம்பினேன் கூட்டைவாளா உள்ளத்தோர் கொடுமை வைத்துக்
காம்பிலா மூழைபோலக் கருதிற்றே முகக்கமாட்டேன்
பாம்பின் வாய்த்தேரை போலப் பலபல நினைக்கின்றேனை
ஓம்பிநீ உய்யக் கொள்ளாய் ஒற்றியூர் உடையகோவே.”
(அப்பர்)
‘அழுக்கு மெய்கொடு உன்திருவடி அடைந்தேன்
அதுவு(ம்) நான் படப்பால தொன்றானால்
பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்
பிழைப் பனாகிலும் திருவடிப் பிழையேன்
வழுக்கி வீழினுந் திருப்பெய ரல்லால்
மற்று நானறியேன் மறு மாற்றம்
ஒழுக்க என்கணுக்கு ஒரு மருந்துரையாய்
ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே.”
(சுந்தரர்)
“மெய்த் தொண்டர் செல்லும் நெறி அறியேன் மிகநற்பணி செய்
கைத் தொண்டர் தம்மிலும் நற்றொண்டு வந்திலன் உண்பதற்கே
பொய்த் தொண்டு பேசிப் புறம்புறமே உன்னைப் போற்றுகின்ற
இத்தொண்டனேன்பணி கொள்ளுதியோ கச்சி ஏகம்பனே”
(பட்டினத்தார்)
“தஞ்சாகமூவுலகும் ஆண்டு தலையளித்திட்(டு)
எஞ்சாமை பெற்றிடினும் யான்வேண்டேன் - நஞ்சம்
கரந்துண்ட கண்டர்தம் ஒற்றியூர் பற்றி
இரந்துண்டிருக்கப் பெறின்”
(ஐயடிகள் காடவர்கோன்)
-“தேர்ந்துலகர்
போற்றும் திருவொற்றிப் பூங்கோயிற்குட் பெரியோர்
சாற்றும் புகழ்வேத சாரமே
(அருட்பா)
அஞ்சல் முகவரி :-
அ/மி. தியாகராஜசுவாமி திருக்கோயில்
திருவொற்றியூர், சென்னை - 600 019.