வைணவ அடியார்கள்,
அவனை அறிதலையே பெரிய கல்வியாகவும், அவனுக்கு
தொண்டு செய்துய்யும் குலத்தில் பிறப்பதே நற்குலமென்றும்
அவனதடியார்களைப் போற்றி ஆராதித்து அன்பு செலுத்திப்
பணிவிடை செய்தலையே தொழிலாகக் கொண்டு திகழ்வர்
“உற்றதும் உன்னடியார்க் கடிமை” யென்று ஆழ்வார் கூறிய
நிலையில் இருப்பர்.
தம்மைவிட சிறந்த வைணவர்களைக் கண்டால் ‘எற்றே இவர்க்கு
நாமின்று’ என்று அவர் பெருமைக்கு முன்பு தம்மைத் தாழ்த்திப்
பணிந்துகொள்வர்.
இத்தகைய அடியார்கட்கான அறிவு, குலம், தொழில் எல்லாம்
தருவது காரகத்தான்தான் என்பதும் இந்த அந்தாதிப்பாவின்
அரும்பொருளாகும்.
தனித்த பாசுரம் இன்றி ஒரு சொற்றொடராலே திருமங்கை
இப்பெருமானை மங்களாசாசித்துள்ளார். இப்பெருமை மற்ற
ஆழ்வார்களைவிட திருமங்கைக்கு மட்டுமே சாலவும் பொருந்தும்.
அதாவது ஒரு திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்து
கொண்டிருக்கும்போதே திருமங்கைக்கு வேறு ஒரு திவ்ய தேசத்து
எம்பெருமானின் நினைவு வந்து விடுகிறது. பிறகு ஒன்று, இரண்டு,
மூன்று என திவ்ய தேச நினைவுகள் சங்கிலித் தொடர் விளைவு
போல நினைவலைகளில் நீந்துகின்றன. இதில் எங்கே
இப்பெருமானை விட்டுவிடுவோமோ வென்றெண்ணி விடாதிருக்கும்
பொருட்டே சொற்றொடர் மங்களாசாசனத்தை நல்குகிறார்.
எனவே தமது நினைவுக்கு வரும் திவ்ய தேசத்து
எம்பெருமான்களை ஒருவர்பின் ஒருவராக தொடர்
மங்களாசாசனம் செய்துவிடுகிறார். திருமங்கையாழ்வார் திவ்ய
தேசங்களில் திளைத்து ஈடுபடுவதை எளிதில் விளக்கிவிட
முடியாது. இதனாற்றான் இவரை முன்னோர்கள் ஆத்மாவை
வெய்யிலில் வைத்து உடலை நிழல் வைத்து வளர்த்தவர் என்று
மொழிந்துள்ளார்.
அதாவது எந்நேரமும், எப்போதும் இவரது ஆத்மா திவ்ய
தேசங்களின் திருவாசல்களிலேயே சஞ்சரித்துக் கொண்டே
இருந்ததால் ஆத்மாவை வெயிலில் வைத்து என்றனர். அதாவது
ஒரு திவ்ய தேசத்தை சேவித்துக் கொண்டே இருக்கும்போது
இவரது ஆத்மா இன்னொரு திவ்ய தேசத்தின் திருமுற்றத்தில்
பெருமாளோடு சம்பாஷணையில் இருக்குமாம்.
எம்பெருமானின் திவ்யதேசங்கட்குத் தொண்டு செய்வதற்காகவே
தமது சரீரத்தைச் சரீர பலத்தை செலவழித்ததால் உடலை நிழலில்
[திவ்ய தேசத்து மதில் நிழல்களில், கோபுர நிழல்களில்,
எம்பெருமான்களின் திருவடி நிழலில்] வைத்தார் என்பர்.
இங்கு காரகத்து எம்பெருமானை மங்களாசாசனம் செய்யவந்தார்.
நெஞ்சமோ நீரகத்திற்கு தாவியது. அங்கிருந்து நெடுவரை
என்னும் வேங்கடம் மேவியது. நிலாத்திங்கள் துண்டன்பால்
நெகிழ்ந்தது. பின்பு கச்சி சென்று ஊரகத்தே புகுந்தது. உடனே
வெஃகாவென்று வெருவியது. அவ்வமயமே அந்தராத்மியாய்
பெருமான் இருப்பது நினைவுக்கு வரவே உள்ளுவாருள்ளத்தாய்
என்று மங்களாசாசனமானது. அந்நிலையில் தாம் காரகத்து திவ்ய
தேசத்தில் இருப்பது நினைவுக்கு வரவே உலகமேத்தும்
காரகத்தாய் என்று மங்களாசாசனம் செய்தார். அந்நொடியிலேயே
காரகம் விடுத்துக் கார்வானம் புகுந்தார். அப்போது கள்வனின்
நினைவும் வந்துவிட்டது. எனவே ‘கள்வா’ என்று
மங்களாசாசனமிட்டார். அப்போதும் தம் நெஞ்சைவிட்டு
எப்போதும் நீங்கா நிற்கும் காவிரியின் நினைவு வந்தது. உடனே
காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய் என்று திருப்பேர்
நகரைக் கூவினார்.
இங்கெல்லாம் இருப்பவன் என் நெஞ்சத்தினின்றும்
பேராதுள்ளானே என்று ஆத்மா அவனைவிட்டு நீங்காத் தன்மை
பெற்றதை நிலைநிறுத்துகிறார். தற்போது தலைப்பில் உள்ள
பாடலைப் பாருங்கள். இவரது ஆத்மா காரகத்தில் நின்று
கொண்டிருக்கும் போதே திவ்ய தேசங்களில்
சஞ்சரித்தமைதெற்றென விளங்கும்.
இத்துடன் நின்றாரில்லை உடனே அடுத்த பாடலில் வங்கத்தால்
மாமணி வந்ததுந்து முந்நீர் மல்லையாய் என்று திருக்கடன்
மல்லை (2060) சென்றது. என்னே இவர்தம் அர்ச்சாவதார
ஈடுபாடு. எனவே இவர் ஆத்மாவை வெயிலில் வைத்தவர்
என்பதற்குத் தடையேதுமுண்டோ.