துவாரகாபுரியிலிருந்து கண்ணபிரான் சத்தியபாமாவுடன் இங்கு வந்ததால் இது துவாரகைக்குச் சமமான ஸ்தலம்.
காவளம் என்னும் சொல்லிற் கொப்ப அழகிய பொழில்கள் சூழ்ந்து துவாரகாபுரியைப் போலவே செழித்து திகழ்கிறது.
திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. திருமங்கையாழ்வாரின் அவதாரஸ்தலமான குறையலூர் மற்றும் அவர் வைணவ அடியார்க்கு ததீயாராதனம் (அன்னதானம்) நடத்திய மங்கை மடம் இந்த ஸ்தலத்திற்கு மிகவும் அருகாமையிலேயே அமைந்துள்ளது.
திருநாங்கூரின் கருட சேவைக்கு இந்த துவாரகாபுரி நாதனும் எழுந்தருள்வார்.
இங்கு நாச்சியாரின் திருநாமம் இனிக்கும் தமிழ்ச் சொல்லான “மடவரல் மங்கை” என்பதாகும். இதனைத் திருமங்கையாழ்வார்,
படவரவுச்சி தன் மேல்
பாய்ந்து பல்நடங்கள் செய்து
மடவரல் மங்கை தன்னை
மார்வகத் திருத்தினானே
என்று தம்பாடலில் எழுத்தாண்டுள்ளார்.
சத்தியபாமாவுக்காக கண்ணன் இந்திரலோகத்திலிருந்து பாரி ஜாத மலரைக் கொணர்ந்ததை
கற்பகக் காவு கருதிய காதலிக்கு
இப்பொழு தீவனென்று இந்திரன் காவினில்
நிற்பன செய்து நிலாத்திகழ் முற்றத்துள்
உய்த்தவ னென்னைப் புறம்புல் குவான்
உம்பர்கோனென்னைப் புறம் புல்குவான்
என்று பெரியாழ்வார் நினைவு கூர்கிறார்.