விசயராகவப்பெருமாள் கோவில் - திருப்புட்குழி

அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பர்
    கழியுமா லென்னுள்ளம் மென்னும்
புலங்கெழு பொருநீர் புட்குழி பாடும்
    போதுமோ நீர்மலைக் கென்னும்
குலங்கெழு கொல்லி கோமள வல்லிக்
    கொடியிடை நெடுமழைக் கண்ணி
இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய்
    இடவெந்தை யெந்தை பிரானே (1115)
            பெரியதிருமொழி 2-7-8

திருமங்கை தன்னையே தாயாகவும் மகளாகவும் பாவித்துக்
கொண்டார். மகள் படும் பாட்டைத் தாய் முறையிடுவது போல
எம்பெருமானிடம் முறையிடுகிறார். எம்பெருமானே என்மகள் நின்மீது
கொண்ட காதல் கொஞ்சமும் குறையவில்லை பித்துப் பிடித்து
அலைகிறாள். சொல்லொனாக் காமமுற்று திகழ்கிறாள். அழகு
பொருந்திய தடக்கைகள் கொண்ட ஆயனாக வந்த கண்ணபிரானின்
ஆம்பல் நிற வாயைச் சுவைக்கவே என்னுள்ளம் அழிகிற தென்கிறாள்.
திவ்ய தேசத்து எம்பெருமானின் பேரழகையெல்லாம் சொல்லிச்
சொல்லி மாய்கிறாள். பல திவ்ய தேசத்து எம்பெருமான்களை
நினைத்துப் பார்க்கிறாள். திடீரென அவளுக்கு புட்குழியெம்பெருமானின்
நினைவு வருகிறது திருப்புட்குழி எம்பெருமானை வாயாரப் பாடுகிறாள்.
அக்கணமே திருநீர் மலை எம்பெருமானின் நினைவு வருகிறது. திருநீர்
மலைக்குப்     போக மாட்டேனோ என்று     பொருமுகிறாள்.
கொல்லிமலைப்பாவை     போன்றல்லவா     இவள்     இருக்கிறாள்
(கொல்லிப்பாவை - தேவ மகளிருக்குச் சமமாக கொல்லி மலையில்
இருந்த ஒரு பெண் காண்போரை யெல்லாம் மோகிக்கச் செய்தவள்)
கோமள வதனமும், கொடியிடையும் மழைமேகம் போன்ற கூந்தலில்
அழகிய மலர்களைச் சூடி எழில்கொஞ்சும் தோள்களைக் கொண்டு
கொல்லியம் பாவை போன்ற பேரழகுபொருந்திய இவள் பொருட்டு நீ
என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று தன் மகள் பொருட்டு
தாயொருத்தி கேட்பது போல் திருமங்கை கேட்டு மங்களாசாசனம்
செய்துள்ள இப்பாடலில் குறிக்கப்பட்ட புட்குழி என்னும் இத்தலம்
காஞ்சிக்கு மேற்கே 7 மைல் தூரத்தில் உள்ள பாலு செட்டி சத்திரம்
என்ற ஊரிலிருந்து தெற்கே செல்லும் சாலையில் சுமார் 2 பர்லாங்
தூரத்தில் அமைந்துள்ளது.

சென்னையிலிருந்து வேலூர் சாலையில் அமைந்துள்ள இந்த பாலு
செட்டி சத்திரத்திலிருந்து நடந்தே செல்லலாம். சென்னையிலிருந்தும்
காஞ்சிபுரத்தில் இருந்தும் தற்போது ஏராளமான பேருந்துகள் உண்டு.

பின்