கல்யாண சகந்நாதப் பெருமாள் கோவில்
திருப்புல்லாணி
வரலாறு

இத்தலவரலாறு வியாசபகவானால் எழுதப்பட்ட 18 புராணங்களில்
ஒன்றான ஆக்கினேய புராணத்தில் 9 அத்தியாயங்களில் பேசப்படுகிறது.

திரேதாயுகத்தின் விபவ அவதாரமான இராமாவதாரத்திற்கும்
முற்பட்டது இத்தலம், ஸ்ரீ இராமனின் தந்தை தசரதனால்
பூஜிக்கப்பட்டதெனில் தொன்மை எழுத்தில் அடங்குந் தன்மையதன்று.

சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனைக் கொல்லற் பொருட்டு
இராமபிரான்     வானர     சேனையுடன்     புறப்பட்டுச் சென்று
தென்கடற்கரையடைந்து (சேதுக்கரை) கடலைக்கடக்க உபாயஞ்
சொல்லவேண்டும்மென்று அக்கடலரசனான வருணணைப் பிரார்த்தித்து
7 நாட்கள் பிரயோபவேசமாக (தர்ப்பைப் புல்லான நாணலில்) கிடந்த
தலமாதலால் இத்தலம் வடமொழியில் தர்ப்பசயனம் எனவும், (இராமன்
தர்ப்பசயன ராமன் எனவும்) தமிழில் புல்லணை எனவும் பெயராயிற்று.

இராமபிரானே இத்தலத்து பெருமாளைப் பூஜித்தான். திருவரங்கனைப்
போன்று இவரும் பெரிய பெருமாள் என்றே அழைக்கப்படுகிறார்.
இத்தலத்தில் உள்ள ஆதிஜெகநாதப் பெருமாளை இராமன் பூஜித்து
அவரால்     கொடுக்கப்பட்ட வில்லைப்     பெற்று     இராவண
வதஞ்செய்ததாகவும் வரலாறு. பூரியில் ஜெகந்நாத சேத்திரத்தில்
அரூபியாக திகழும் இப்பெருமாள் இங்கு சங்கு சக்கரங்களுடன்
நான்கு கரங்களுடன் ஸ்வரூபராய்த் திகழ்கிறார்.

புல்லவர், கண்ணுவர், காலவர் என்ற மூன்று மஹரிஷிகளும்
இப்புண்ணிய பூமியில் தவமியற்ற அவர்களுக்காக பகவான்
வைகுண்டத்திலிருந்து     இத்தலத்திற்கு     வந்து அஸ்வத்தமாக
(அரசமரமாக) பொன் மயமாய் அவதரித்தார். இந்த அரச மரத்தையே
உபாஸகர்கள் அஸ்வந்த நாராயணன் வடிவமாக தியானித்தனர்.

இத்தலத்தை வடமொழியில் புல்லாரண்யம் என்றும் தமிழில்
புல்லணை என்றும் கூறுவர். வடமொழிச் சொல்லுக்கு மலர்ந்து மலர்கள்
அடர்ந்த காடு என்றும் முனிவர் தவஞ்செய்த காடு என்றும்
இருபொருள் கொள்ளலாம்.

புல்லணை என்பதற்கு திருப்புல் - அதாவது தருப்பை அப்புல்லை
அணைந்து ஸ்ரீராமன் பள்ளி கொண்டதால் புல்லணை என்றும், தருப்பை
புற்கள் (நாணற்புதர்கள்) அடர்ந்தோங்கி வளருங்காடு என்றும்
பொருள்படும்.

இராமன்     இலங்கையினின்றும்     திரும்புகையில் மீண்டும்
இவ்விடத்திற்கு வந்தபோது பக்தர்களின் வேண்டுதலுக்கிணங்கி இங்கு
பட்டாபிஷேகம் செய்து கொண்டதால் பட்டாபிராமன் எனவும்
திருநாமம் உண்டாயிற்று.

முன் பின்