அப்பக்குடத்தான் கோவில் - திருப்யர் நகர்
வரலாறு

இத்தலம் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
புராணம் இதனை பலசவனச் ஷேத்திரம் என்று பகர்கிறது. தமிழில்
புரசாங்காடு என்பதையே வட வானர் பலசவனம் என்று
எடுத்தாண்டுள்ளனர். இவ்விடத்து புரசஞ் செடிகள் இன்றும் அளவு
கடந்து பல்கிக் கிளைத்து சூழ்ந்து வளர்ந்தோங்கிய காட்சியைக்
காணலாம்.

உபமன்யு என்னும் மன்னன் துர்வாச முனிவரின் சாபத்தால்
தன்பலமிழந்து போக அதற்கு விமோசனம் வேண்ட இப்பலசவனம்
ஷேத்திரத்தில் லட்சம்பேருக்கு அன்னதானம் அளித்தால் (ததி
ஆராதனம்) சாபந்தீரும் என்று துர்வாசர் தெரிவிக்க இத்தலத்தின்
அருகில் ஒரு அரண்மனையெழுப்பி அன்னதானம் செய்யலானார்.

நீண்டகாலமாக அன்னதானம் தொடர்ந்து நடந்து வருகையில்
ஒருநாள் ஸ்ரீமந்நாராயணனே கிழப்பிராமண வேடங்கொண்டு இங்கு
வந்து அன்னம் கேட்க அவருக்கும் பரிமாறப்பட்டது.

ஸ்ரீமந்நாராயணன் அன்றைய தினம் தயாரிக்கப்பட்ட உணவு
முழுவதையும் உண்டு தீர்க்க “இதென்ன காரியம்” என்று வியந்த
மன்னன் இன்னும் என்ன வேண்டுமென்று கேட்க எனக்கு ஒரு குடம்
அப்பம் வேண்டுமென்று பெருமாள் சொல்ல அப்பம் செய்து
கொண்டுவரப்பட்டது. அந்த அப்பக் குடத்தை பெருமாள்
வாங்கியவுடன் உபமன்யு சாபம் தீர்ந்ததென வரலாறு.

இதனால் இப்பெருமானுக்கு “அப்பக்குடத்தான்” என்னும்
பெயருண்டாயிற்று. இப்பெருமானின் வலது கை ஒரு அப்பக் குடத்தை
அணைத்தவண்ணம் உள்ளது.

முன் பின்