வெள்ளத்துள் ஓராலிலை மேல் மேவி
அடியேன் மனம் புகுந்தென்
உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும்
நின்றார் நின்ற ஊர் போலும்
புள்ளுப் பிள்ளைக்கு இரைதேடி
போனகாதல் பெடையோடும்
அள்ளல் செறுவில் கயல் நாடும்
அணியார் வயல் சூழ் அழுந்தூரே
(1591) பெரியதிருமொழி 7-5-4
பிள்ளைக்கு இரைதேடித் தன் பெடையோடு செல்லும் பறவைகளின்
காலடிச் சத்தத்தைக் கேட்டு நீர்சூழ்ந்த கழனிகளில் சரேல்சரேலென்று
மீன்கள் பாயக்கூடிய அழகிய வயல்கள் சூழ்ந்த அழுந்தூரில்,
ஆலமரத்திலை மேல் துயில் கொண்டு, தன் உள்ளத்தில் உறைகின்ற
பிரான் நின்றவூர் இதுதான் போலும் என்று திருமங்கையாழ்வார் திருவாய் மலர்ந்தருளிய இத்திருவழுந்தூர் தஞ்சை மாவட்டத்தில்
மாயவரத்திலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் இருக்கிறது. (மாயவரம் - கும்பகோணம் பாதையில் இரண்டாவது ரயில் நிலையம்)
|