Primary tabs
சங்க காலத்தில் இருந்து மறைந்தனவாகச் சிற்றிசை,
பேரிசை, இசை
நுணுக்கம் போன்ற இசை நூல்கள் குறித்துப்
பெயரளவில் மட்டுமே தெரிந்து கொள்ள
முடிகின்றது. பரிபாடல்
இசைப்பா வகையைச் சார்ந்ததேயாகும்.
இசைப்பாக்களைச் சந்தப்பாடல், கும்மிப்பாடல்,
சிந்துப்பாடல் என மூவகைப்படுத்தலாம்.
ஒரு குறிப்பிட்ட ஓசை பயின்று வருவதே சந்தம் எனப்படும்.
கலி விருத்தம், கழிநெடிலடி, ஆசிரிய விருத்தம் போன்றவற்றின்
சீர்கள், குறிப்பிட்ட சந்தங்களே அமையச் சந்த விருத்தங்களாக
அமைக்கப் பெறுவதும் உண்டு.
காலம் போயிற் றஞ்சன மன்ன கடாமீதில்
ஆலம் போல்வெங் காலனும் அந்தோ அணுகுற்றான்
சீலம் கேண்மின் ஒய்யென வேதம் சிவஞானி
கோலம் காணும் கொள்கைக ருத்தில் குறியீரே
(சிவஞானக் கலம்பகம் - 12)
என வரும் சிவப்பிரகாசரின் பாடல் இதற்குச் சான்றாகும்.
தொல்காப்பியச் செய்யுளியல்
(நூ.210-231) வண்ணங்கள்
குறித்து விரிவாக எடுத்துரைக்கின்றது. பிற்காலத்தில் எழுந்த
வண்ணத்தியல்பு, குமாரபூபதியம் போன்றன
இது குறித்து
விவரிக்க எழுந்த நூல்களாகும்.
எழுத்து, சந்தம், துள்ளல், குழிப்பு, கலை, அடி,
பாடல் என
முறையே ஒன்றினால் மற்றொன்று அமைய வண்ணப் பாக்கள்
உருவாகின்றன. திருப்புகழ்ப் பாக்கள் சில வருமாறு :
வல்லோசை
- தத்தத்தன தத்தத் தனதன. . . (3) - தனதான
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர - எனவோதும்
மெல்லோசை
- தந்தனந் தந்தந் தனதான
சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலம் துஞ்சித் திரியாதே
இடையினவோசை
- தய்யதன தான .. . (3) - தனதான
அல்லிவிழி யாலும் முல்லைநகை யாலும்
அல்லல்பட ஆசைக் கடலீயும்
இவ்வாறு
திருப்புகழில் இடம் பெறுவனவற்றின் குழிப்புகள்,தாளம், இராகம், மாத்திரையளவு போன்றவற்றை
அறிந்து பாடினால்
உள்ளம் உருகும் என்பது உறுதி.
கும்மி, வெண்பாவின் பாவினத்தைச் சார்ந்தது.
மகளிர் குழுமிக் கைகொட்டி விளையாடும் பொழுது பாடுவதே கும்மி ஆகும். கும்மிப் பாடல் வெண்பா இனத்தைச் சார்ந்தது ; வெண்டளை மட்டுமே அமைந்த எழுசீர்க் கழிநெடிலடிகள் ஓர் எதுகை கொண்டு அமைவது ; ஈற்றுச் சீர் பெரும்பாலும் விளங்காய்ச் சீராக வரும்.
இயற்கும்மி, ஒயிற் கும்மி, ஓரடிக் கும்மி என்பன
கும்மியின் வகைகளாகும்.
ஓரடியில் ஏழு சீர்கள் அமையும். அது 4 சீர், 3 சீர் என
மடக்கி எழுதப்படும். இவ்வாறு 2 அடியும் 4 வரியும்
கொண்டதாக அமையும். முதற்சீரும் ஐந்தாம் சீரும் மோனை
பெறும்.
எடுத்துக்காட்டு :
கும்மி யடிதமிழ் நாடு முழுவதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி !
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மைகண் டோமென்று கும்மியடி !
(பாரதியார்)
மூன்றாம் சீரும் ஏழாம் சீரும் இயைபுத் தொடை அமையப் பாடப்
பெறுவதும் உண்டு.
எடுத்துக்காட்டு :
நல்லபண் டங்களைக் கண்டறியோம் - ஒரு
நாளும் வயிறார உண்டறியோம்
அல்லும் பகலும் அலைந்திடுவோம் - பசி
யாற வழியின்றி வாடிடுவோம்
(கவிமணி)
அரிச்சந்திரக்
கும்மி, ஞானக் கும்மி, வாலைக் கும்மி
முதலிய கும்மி நூல்களில் இயற்கும்மிப் பாடல்களைப்
படித்தறியலாம்.
மூன்று அடிகளில் அமையும். முதலடி இருவரிகளிலும்,
இரண்டாமடி இரு வரிகளிலும், மூன்றாமடி ஒரு வரியிலும்
அமையும். இரண்டாமடி முடுகியல் அடியாக வரும் ; வெண்டளை
பெறவேண்டியதில்லை. ஆனால் முதலடியும் மூன்றாமடியும்
வெண்டளை பெற்று வரும். அடிகள் தோறும் மோனை அமைதல்
நன்று. முடுகியலடியின் 1, 3 சீர்கள் மோனை பெறும்.
எடுத்துக்காட்டு :
தென்பரங் குன்றினில் மேவும் குருபர
தேசிகன் மேற்கும்மிப் பாட்டுரைக்கச்
சிகரத்திரு மகரக்குழை
திகழுற்றிடும் உமைபெற்றிடு
தில்லை விநாயகன் காப்பாமே
என்பது முருகர் ஒயிற்கும்மிப் பாடல்.
கும்மியின் இலக்கணம் அமையப் பெற்ற எழுசீர்க்
கழிநெடிலடி ஒன்றே, பொருள் முற்றிவரின் அஃது ஓரடிக் கும்மி
எனப்படும்.
முதற்சீரும் ஐந்தாம் சீரும் மோனையோ, எதுகையோ
பெற்றுச் சிறந்து வரும்.
எடுத்துக்காட்டு :
1. மோனை
ஆளுடன்
ஆளும் உகையாம லேநீங்கள்
ஆளுக் கொருமுழம் தள்ளிநில்லும்
2. எதுகை
பாட்டுக்
குகந்த படியிரு கையையும்
ஆட்டியொய் யாரமாய் ஆடிடுவோம்
சிந்து, அளவொத்த இரண்டடிகளில் அமையும் ;
நான்கடிகள் ஓரெதுகை பெற்று
வருதலும் உண்டு ; தளை
வரையறை இல்லை ; சந்தம் நன்கு அமைய வேண்டும் ; மடக்கடி,
மோனை பெற
வேண்டும் ; தனிச்சொல் அடிதோறுமோ,
மடக்கடிதோறுமோ வருவதுண்டு. தனிச்சொல் இடம்பெறாத
சிந்துப்பாக்களும் உண்டு.
சமநிலைச் சிந்து, வியனிலைச் சிந்து எனச் சிந்துப்பா இரு
வகைப்படும்.
அளவான சீர்களைக் கொண்டு நடப்பது இது ; தனிச் சொல்லின் முன் உள்ள அரையடியும், பின் உள்ள அரையடியும் தம்முள் அளவொத்து விளங்குவது.
எடுத்துக்காட்டு :
1. அரையடிதோறும் இயைபு பெறுவது :
ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்க
லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா - ஒரு
குழந்தையை வையாதே
பாப்பா
(பாரதியார்)
2. அடிதோறும் இயைபு பெறுவது :
வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
யாரம் படைத்த தமிழ்நாடு
(பாரதியார்)
தனிச் சொல்லின் முன்னும் பின்னும் மூன்று சீர்களேயன்றி
இருசீர், நாற்சீர், ஐஞ்சீர், அறுசீர் என வரவும் பெறலாம் என்பது
இங்கு நினைவு கொள்ளத் தக்கது.
தனிச்சொல்லின் முன் உள்ள அரையடியும், பின் உள்ள
அரையடியும் தம்முன் அளவு ஒவ்வாமல் வருவது, ‘வியனிலைச்
சிந்து’ எனப்படும்.
எடுத்துக்காட்டு :
1. தனிச்சொற்கு முன்னும் பின்னும் முறையே 3, 4 சீர்கள் அமைதல் :
தின்னப் பழங்கொண்டு தருவான் - பாதி
தின்கின்ற
போதிலே தட்டிப் பறிப்பான்
என்னப்பன் என்ஐயன் என்றால் - அதை
எச்சிற்
படுத்திக் கடித்துக் கொடுப்பான்
(பாரதியார்)
2. நான்கடி ஓரெதுகை பெற்று வருதல் :
அத்தின புரமுண்டாம் - இவ்
அவனியி லேஅதற்கு இணையிலையாம்
பத்தியில் வீதிகளாம் - வெள்ளைப்
பனிவரை போற்பல மாளிகையாம்
முத்தொளிர் மாடங்களாம் - எங்கும்
மொய்த்தளி சூழ்மலர்ச் சோலைகளாம்
நத்தியல் வாவிகளாம் - அங்கு
நாடும் இரதிநிகர் தேவிகளாம்
(பாரதியார்)
(பத்தி
= வரிசை ; அளி = வண்டு
; நத்து = விருப்பம் ;
வாவி = குளம்)
சித்தர் பாடல், பள்ளு, குறவஞ்சி, பாரதியார்
பாடல் முதலியவற்றில்
இவற்றைப் பயின்றுணரலாம்.
இவ்வாறே அண்ணாமலை ரெட்டியார் இயற்றிய காவடிச் சிந்து,
பாரதியார் இயற்றிய நொண்டிச் சிந்து போன்றனவும் பயிலத்
தக்கனவாகும்.
மரபுக் கவிதைகளோடு தொடர்புடையனவாதலின்,
இசைப்பாக்கள் இணைத்துச் சிந்திக்கப் பெற்றன.