தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


தலை கவிழ வைத்தாயே

காதலர்களது நட்பு குடமுடைந்து பூச் சிதறியது போல ஊராருக்கெல்லாம் தெரிந்துவிட்டது. அவளுடைய தந்தைக்கும் தெரிந்து அவளிடம் கடும் கோபத்தோடு விசாரிக்கிறார். அவள் பதில் பேசாமல் தலை கவிழ்கிறாள். இந்த நிலை ஏற்படும் முன்பே தலை நிமிர்ந்து ஊரில் நடக்கும்படியாக அவளை அவன் மணம் செய்து கொண்டிருக்க வேண்டாமா? மதயானையிடம் கரும்பு வளைந்து கொடுப்பதுபோல அவள் அவனுக்கு ஆட்பட்டு விட்டாள். கரும்புச் சாறை உறிஞ்சிய யானை சக்கையை எறிவது போல் அவனும் பிரிந்து விடுவானா? இந்த ஏக்கத்தையும், சந்தேகத்தையும் அவள் காது கேட்க வெளியிடுகிறாள்.

கரும்பு வெட்டி மொழி நறுக்கி
மொழிக்கு மொழி தேனடைச்சு
கரும்பு திங்கற நாளையிலே
நமக்குக் கசப்பு வந்து நேர்ந்ததென்ன?
கரும்பா வணங்கினனே
கருத்த மதம் யானையிடம்
துரும்பா உணருதேனே
துன்பப் பட்ட பாவியாலே
நானா விரும்பலையே
நைக் கரும்பு திங்கலையே
தானா விரும்பினையே-என்னை
தலை கவுர வச்சுட்டையே!
கூடினமே கூடினமே
குடத்திலிட்ட பூப் போல
குடமுடைஞ்சி பூச்சிதற
கூடறது எக்காலம்?
ஒரு நாள் ஒரு பொழுது
ஒம் முகத்தை பாராட்ட
ஓடைக்கரை மண்ணெடுத்து
உன் உருவம் செய்து பார்த்திடுவேன்

சேகரித்தவர்:
S.M. கார்க்கி

இடம்:
நெல்லை மாவட்டம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:18:47(இந்திய நேரம்)