தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


மாரடிப்பு

ஒப்பாரி பாடும் முன்னால் பெண்கள் மாரடித்துக் கொண்டு ஒரு பாட்டுப் பாடுவார்கள். தகப்பன் இறந்து போனால் அவருடைய பெண்மக்கள் மாரடிப்பார்கள். அவரைவிட வயதில் குறைந்தவர்களும் மாரடித்துக் கொண்டு கூடச் சேர்ந்து பாடுவார்கள். அப்பாட்டில் சவ அடக்கச் சடங்குகள் பலவும் வரிசையாகக் கூறப்படும். இச் சடங்குகள் சாதிக்குச் சாதி மாறுபடும். அவை சாதி உயர்வு தாழ்வுகள் பற்றி வெவ்வேறாயிருக்கும். இவற்றில் ஒரு சாதிக்குரிய சடங்கைப் பிற சாதியினர் செய்தால் கலகம் உண்டாகி விடும். திருமலை நாயக்கர் காலத்தில் பள்ளருக்கும் பறையருக்கும், சாவின்போது எத்தனை குடைகள் பிடிக்க வேண்டுமென்பதில் சச்சரவுண்டாகிப் பெருங்கலகம் தோன்றியது. நாயக்கர் தலையிட்டு சமரசம் செய்து வைத்து சாசனம் பிறப்பித்தார். அரசாங்கம் இவ்வேறுபாடுகளைப் பாதுகாத்து நிலை நிறுத்தியது. பந்தல் போடுவது, நடைபாதையில் துணி விரிப்பது, கருமம் செய்பவனுக்குக் குடை பிடிப்பது, சங்கம் ஊதுவது, இரட்டை மேளம் வாசிப்பது இவை போன்ற வழக்கங்கள் சாதிக்குச் சாதி சமூக வழக்கங்களால் அறுதியிடப்பட்டுள்ளன. இவற்றைப் பற்றிய செய்திகள் பல நாயக்கர் கால சாசனங்களில் காணப்படுகின்றன.

மாரடிப் பாட்டு-1

ஐயாவே ஐயாவே
பாலு கொண்டு வந்தியளோ
பாதரவம் தீத்தியளோ
மோரு கொண்டு வந்தியளோ
மோட்ச கதி பெத்தியளோ
மூத்த மகன் கண்ணருகே
மோட்ச கதி பெத்தியளோ
இளைய மகன் கண்ணருகே
எமலோகம் சேர்ந்தியளோ
காலனுமே அழைச்சானோ உங்கள்
கணக்கெடுத்துப் பார்த்தானோ
எமன் அழைச்சானோ
ஏடெடுத்துப் பார்த்தானோ

மூத்த மகன் முடியிறக்க
மோட்ச கதி பெத்தியளோ
இளைய மகன் முடியிறக்க
எமலோகம் சேர்ந்தியளோ
அரையளவு தண்ணியிலே
அள்ளி வந்தார் நீர்மாலை
இடுப்பளவு தண்ணியிலே
எடுத்து வந்தார் நீர்மாலை
வருகுதில்ல நீர்மாலை
வைகுந்த வழிகாட்ட
போகுதில்ல நீர்மாலை
பூலோகம் எதித்தளிக்க
இடுகாடு தேரிறக்க
ஈண்ட பசு போதாதோ
மலையேறி மேஞ்சு வரும்
மயிலைப் பசு கோதானம்
கரையேறி மேஞ்சு வரும்
கருத்தப் பசு கோதானம்
வீதியிலே போற ரதம்
வீமனையே பெற்றெடுத்த
வெள்ளி ரதம் போகுதென்பார்.

வாழை கட்டிப் பந்தலிலே
வரிசை மக வந்து நிற்கா
வரிசை மக கையறஞ்சா
வந்த சனம் கையறையும்
சீலை கட்டிப் பந்தலிலே
செல்ல மக வந்து நிக்கா
செல்ல மக கையறஞ்சா
சேந்த சனம் கையறையும்
தடயம் விட்டு மாரடிக்க
தங்க மக வேணுமின்னு
பட்டுடுத்தி மாரடிக்க
பார மக வேணுமின்னு
கொப்புப் பூட்டி மாரடிக்க
பொண்ணடியும் வேணுமின்னு.

சேகரித்தவர் :
S.M. கார்க்கி்

இடம்:
சிவகிரி,நெல்லை.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 06:08:35(இந்திய நேரம்)