தமிழக விலங்கினங்கள்

முனைவர் ச.பரிமளா
பேராசிரியர் மற்றும் தலைவர்
தொல்லறிவியல் துறை

கலைகளின் பிறப்பிடம், இலக்கியங்கள் உறைவிடம் என்று தனியிடம் பெற்றுள்ள தமிழகம் இயற்கை வளங்களிலும் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கிறது. தமிழகத்துக்கே உரிய தாவர இனங்களும் விலங்கின வகைகளும் இன்று ஆயிரக்கணக்கில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அதே வேளையில் ஒரு சில அழிந்து கொண்டும் வருகின்றன. குறிப்பாக, “விலங்கு உலகம்” என்று எடுத்துக்கொண்டோமானால் ஒற்றைசெல் ( uncellular) உயிரியான ‘அமீபா’ முதல் பிரமிப்பூட்டும் மிகப்பெரிய உருவம் கொண்ட யானை முதலான பலசெல் உயிரிகள் வரை (multicellular) அனைத்துமே விலங்குகள் என்றே பொதுவாக அழைக்கப்படுகின்றன. இவ்விலங்குகள் பெரும்பாலும், புரையுடலிகள், குழியுடலிகள், மெல்லுடலிகள், கணுக்காலிகள், முன்தோலிகள், மீன்கள், நீர்நில வாழ்விகள், ஊரிகள், பறவைகள், பாலூட்டிகள் என்று பெரும் பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன. இப்பிரிவுகளுள் அடங்கும் விலங்கினங்கள் அனைத்துமே தமிழகத்துக் கடற்பகுதிகளிலும், நிலப்பகுதிகளிலும் பரவிக் காணப்படுவது தமிழக விலங்கின வளத்திற்குப் பெருமை சேர்ப்பதாகும்.