பெரிய மேளம்

முனைவர் சி.சுந்தரேசன்
துறைத்தலைவர்
நாட்டுப்புறவியல் துறை

பெரிய மேளம் எனப்படும் தோலிசைக் கருவி முக்கியமாக இடம்பெறுவதால் இக்கலை பெரிய மேளம் எனப் பெயர் பெற்றது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் இக்கலை பரவலாக நிகழ்த்தப்படுகிறது. அருந்ததியர் சாதியினர் இக்கலையை நிகழ்த்துகின்றனர்.

கோவில் திருவிழாக்கள், கட்சிக் கூட்டங்கள், மாநாடுகள், சில சாதியினரின் திருமணங்கள், இறப்புச் சடங்குகளில் இக்கலையை நிகழ்த்துவார்கள். ஒவ்வொரு பெரிய மேளக் குழுவில் இடம்பெறுபவர்கள் எண்ணிக்கையாகப் பார்க்கலாம்.

குழுவின் எண்ணிக்கை : ஏழு பேர்

இசைக்கருவிகள் :ஆறு, தமரு, சட்டி, தமுக்கு, ஜால்ரா, மேளசெட், பெரிய மேளம்

கலைஞர்கள் : ஆறு பேர்

மேளத்தின் எடை : 10 கிலோ

பெரிய மேளம் நிகழ்த்தும்போது ஒவ்வொரு அடிக்குமுள்ள தாளத்தை வேறுபடுத்திக் காட்டுவார்கள். பெரிய மேளத்தில் பத்து அடிமுறைகள் உள்ளன. அந்த அடிமுறைகளைப் ‘பாகம்’ என்று கூறுகின்றனர். இதற்குராகம் எதுவும் கிடையாது. இதன் தாளம் கலைஞர்கள் குறிப்பிடும் தாளமாகக் காணப்படும். பழக்கத்தில் சட்டி அடிப்பவர் அடியை மாற்றும்போது அதற்கேற்ப இசைக்கருவிகளின் இசைக்கேற்ப இசை மாறுபடும். கலைஞர்கள் காலில் சலங்கையைக் கட்டிக்கொண்டிருப்பார். அவர்கள் இசைக்கருவிகளை வைத்து இசைத்துக் கொண்டு ஆடும்போது சலங்கையின் இசையும் கூடுதலாகக் காட்சியளிக்கும்.

• முதல் பாகத்தில் நிகழ்த்தக்கூடிய பத்து ஆட்டங்களின் முன்னோடியே ‘முதலடி’ என்று கூறலாம்.

• இரண்டாவது பாகம் பொதுவாகவே எல்லா விழாக்களிலும் அடிக்கக்கூடிய அடி என்று கூறலாம்.

• திருமண நிகழ்ச்சிக்கு இசைப்பது என்பது மூன்றாவது பாகம்.

• கங்கையம்மனுக்குக் கூழ் வார்க்கும் போது இசைக்கக்கூடிய அடி நான்காம் பாகம்.

• திரைப்படப் பாடல்களுக்குரிய அடியை ஐந்தாம் பாகம் என்று கூறலாம்.

• மாரியம்மனுக்குக் கூழ் வார்க்கும்போது அடிக்கப்படுவது ஆறாம் பாகம்.

• பொங்கல் அன்று நிகழ்த்தக்கூடிய மேளத்திற்கு ஏழாம் பாகம்.

• புலியாட்டத்திற்கு அடிக்கக்கூடிய மேளத்திற்கு எட்டாம் பாகம். இதனை ‘ஜடலடி’ என்றும் கூறலாம்.

• ஒன்பதாவது பாகம் விழாக் காலங்களில் இசைக்கக்கூடியவை.

• ஊரில் யாராவது இறந்தால் சலங்கை கட்டி ஆடுவதும் பெரிய மேளத்தில் சாவு அடியை நிகழ்த்தும் போது ஊரே கூடிவிடும்.

வட தமிழ் நாட்டிலுள்ள மக்கள் இழவுக் காரியங்களுக்குத்தான் பெரிய மேளத்தைப் பயன்படுத்துவார்கள். எனவே, பெரிய மேளத்துக்கான இசைக் கலைஞர்கள் குறைந்துக் கொண்டே வருகின்றனர்.