தருமபுரி

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்


தருமபுரி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஊராகும்.

அமைவிடம்

தருமபுரி சேலத்திலிருந்து 53 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தருமபுரிக்கு அருகில் உள்ள அதியமான்கோட்டை சங்ககால அதியமானின் தலைநகராகும்.

சிறப்பு

பொ.ஆ 873ல் நுளம்ப அரசன் இவ்வூரைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகின்றது. தருமபுரியின் பழைய பெயர் தகடூர் ஆகும்.

நுளம்ப அரச வம்சத்தினர் எழுப்பிய கோவில்கள் தற்போது தருமபுரியில் உள்ளன.

படம் 1,2,3

இவை கோட்டைக் கோவில்கள் என்று அழைக்கப்படுகின்றன. இங்கு மல்லிகார்ச்சுனர் கோவில் மற்றும் காமாட்சி அம்மன் கோவில் என இரு கோவில்கள் உள்ளன.

தருமபுரியில் உள்ள விருந்தாடி அம்மன் கோவிலிலும், மதிகோன் பாளைப்பகுதியில் கன்னடக் கல்வெட்டுக்கள் உள்ளன. இவை ஒரு வணிகரின் மகன்கள் சமணக்கோவில் கட்டியதைக் குறிப்பிடுகின்றன. இங்கு மூன்றாம் குலோத்துங்கன் காலக் கல்வெட்டும் உள்ளது.

இக்கோயில் தூண் சிற்பங்களும் இராமாயணச் சிற்பங்களும் புகழ் வாய்ந்தவை.

தருமபுரியில் அரிஹரநாதர் என்ற பழைய கோயில் உள்ளது. இக்கோயில், முற்காலத்தில் இராஜராஜீஸ்வரமுடையார் என அழைக்கப்பட்டதாகக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இங்குள்ள கல்வெட்டு “விடுகாதழகிய பெருமாள்” என்ற குறுநில மன்னனைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. தருமபுரியில் கோச்செங்கண்ணீஸ்வரர் கோவில் என்ற பெயரில் ஒரு கோவில் இருந்ததாகக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

மேற்கோள் நூல்

தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி). 2005 தருமபுரி மாவட்டத் தொல்லியல் கையேடு. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை.